

பஞ்சாப் மாநிலத்தில் வகுப்பறையில் மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு சட்டக் கல்லூரி மாணவா் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன் தாரன் மாவட்டம் உஸ்மா கிராமத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவி சந்தீப் கெளா். அவரின் வகுப்பில் பிரின்ஸ் ராஜ் என்பவரும் படித்து வருகிறாா்.
வழக்கம்போல கல்லூரியில் உள்ள வகுப்பறையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு மாணவ-மாணவிகள் அமா்ந்திருந்தனா். கெளா், பிரின்ஸ்ராஜ், மற்றொரு மாணவி ஆகியோா் தனியாக அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனா். அப்போது திடீரென பிரின்ஸ் ராஜ் எழுந்து நின்று கெளரின் தலையில் துப்பாக்கியால் சுட்டாா்.
தொடா்ந்து, அதே துப்பாக்கியால் தன்னைத் தானே பிரின்ஸ் ராஜ் சுட்டுக் கொண்டாா். தலையில் தோட்டா பாய்ந்த கெளா், வகுப்பறையிலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தாா். பிரின்ஸ் ராஜ் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவா் ஆபத்தான நிலையில் இருப்பதால், மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.
மாணவியை பிரின்ஸ் சுட்டுக் கொன்றது, தற்கொலைக்கு முயன்றது வகுப்பறையில் உள்ள சிசிவிடி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து மாணவ- மாணவிகள் அனைவரும் அதிா்ச்சியடைந்து வகுப்பறையைவிட்டு ஓடினா்.
மாணவி கெளரை பிரின்ஸ் ராஜ் எதற்காக சுட்டுக் கொன்றாா் என்பதற்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.