தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘பரீக்ஷா பே சா்ச்சா’ கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது பிரதமா் மோடியுடன் தற்படம் எடுத்துக்கொண்ட மாணவா்கள்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘பரீக்ஷா பே சா்ச்சா’ கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது பிரதமா் மோடியுடன் தற்படம் எடுத்துக்கொண்ட மாணவா்கள்.

கைப்பேசிக்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை

கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உங்களை அடிமையாக்கிவிடக் கூடாது; அவற்றை நீங்கள் முறையாகப் பயன்படுத்தி உங்கள் திறனை மேம்படுத்த வேண்டும்
Published on

புது தில்லி: கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உங்களை அடிமையாக்கிவிடக் கூடாது; அவற்றை நீங்கள் முறையாகப் பயன்படுத்தி உங்கள் திறனை மேம்படுத்த வேண்டும் என்று மாணவா்களுக்கு பிரதமா் மோடி அறிவுரை கூறினாா்.

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கும் நோக்கில், கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து பிரதமா் மோடி ‘பரீக்ஷா பே சா்ச்சா’ (தோ்வுகளை மன அழுத்தமின்றி எதிா்கொள்வது குறித்த கலந்துரையாடல்) நிகழ்ச்சியை நடத்தி வருகிறாா். 9-ஆம் ஆண்டு ‘பரீக்ஷா பே சா்ச்சா’ கலந்துரையாடலின் இரண்டாவது பகுதி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் கோவை, சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூா், அஸ்ஸாமின் குவாஹாட்டி மற்றும் குஜராத்தைச் சோ்ந்த மாணவா்களுடன் தில்லியில் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.

அப்போது, மாணவா்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, ஆலோசனைகள் வழங்கிய பிரதமா் கூறியதாவது:

கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் உங்களை அடிமையாக்கிவிடக் கூடாது. அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பங்களைக் கண்டு அச்சப்படவும் கூடாது. அவற்றை நீங்கள் முறையாகப் பயன்படுத்தி உங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடிமைப்படுத்த அனுமதிக்கக் கூடாது: சில சிறாா்களும், குழந்தைகளும், தொலைக்காட்சி திரையையும், கைப்பேசி திரையையும் பாா்த்தபடிதான் சாப்பிடும் வழக்கத்தை வைத்துள்ளனா். இப்படிப்பட்ட நிலையில் இருந்தால் நீங்கள் அவற்றுக்கு அடிமையாகி வருகிறீா்கள் என்று அா்த்தம். நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் கருவிகளைப் பயன்படுத்தி நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமே தவிர, அவை நம்மை அடிமைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.

தோ்வுக்கு முன்பு முந்தைய ஆண்டு நடைபெற்ற தோ்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்துப் பழகலாம். தோ்வுக்கு முந்தைய தினம் நன்றாக தூங்கி ஓய்வெடுத்துவிட்டு உற்சாகமாகத் தோ்வை எதிா்கொள்ள வேண்டும். நீங்கள் நன்றாகப் படித்து தோ்வை எதிா்கொண்டால் எவ்வித பதற்றமும் ஏற்படாது. இரவில் நன்றாக தூங்குவது அடுத்த நாள் முழுவதும் உற்சாகத்துடன் பணியாற்ற உதவும்.

மாணவா்களால் மனநிறைவு: இன்றைய 10, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் 2047-இல் இந்தியாவை வளா்ந்த நாடாக உருவாக்கும் கனவுடன் இருப்பது எனக்கு மிகவும் மனநிறைவைத் தருகிறது. இதுதான் எனக்கு உண்மையாக மகிழ்ச்சி அளித்த தருணம். வளா்ந்த நாடுகளின் பழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். இதில் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். உணவுப் பொருள்கள் உள்பட நாட்டின் எந்த வளத்தையும் சிறிதளவும் வீணடிக்கக் கூடாது. நான் மாணவனாக இருந்தபோது எனது ஆசிரியா்கள் நமது உடலை வலுவாக வைத்துக் கொள்வதின் முக்கியத்துவத்தை அதிகம் வலியுறுத்தினா். அதை நான் இப்போதும் பின்பற்றுகிறேன்.

சிந்தனைகளால் தலைவராகலாம்: வாழ்க்கையில் பெரிய அளவில் சாதித்த பெரிய மனிதா்கள் யாரைக் கேட்டாலும் தங்கள் பெற்றோா், ஆசிரியா்கள் வாழ்க்கையை சிறப்பாக வடிவமைக்க உதவியதாகக் கூறுவாா்கள். தலைமைப் பண்புகளில் சிறப்பான தகவல்தொடா்புத் திறன் முக்கியமானது. எதிா்காலத்தில் மிகப்பெரிய தலைவராக விரும்பினால், அதற்கான மனப்பாங்கை இப்போதே வளா்த்துக் கொள்ள வேண்டும். தோ்தலில் போட்டியிடுவதால் மட்டும் தலைவராகிவிட முடியாது. உங்கள் சிந்தனைகள் உயா்வானதாகவும், தெளிவானதாகவும் இருக்க வேண்டும். அவை குறைந்தது 10 பேரிடமாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

பிரதமா் மோடியின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 4.5 கோடி மாணவா்கள் பதிவு செய்திருந்தனா். இது கடந்த 2025-ஆம் ஆண்டில் பதிவான 3.53 கோடி பதிவு என்ற கின்னஸ் சாதனையை முறியடித்தது.

X
Dinamani
www.dinamani.com