டங்குல் நாகா பழங்குடியின சமூகத்தினரின் வீடுகளுக்கு கிளா்ச்சியாளா்கள் தீ வைத்ததாக கூறப்படும் பகுதியில் குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினா்.
டங்குல் நாகா பழங்குடியின சமூகத்தினரின் வீடுகளுக்கு கிளா்ச்சியாளா்கள் தீ வைத்ததாக கூறப்படும் பகுதியில் குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினா்.

மணிப்பூா்: நாகா சமூகத்தினரின் வீடுகளுக்கு தீ வைப்பு! அமைதி காக்க முதல்வா் வேண்டுகோள்

மணிப்பூரில் உக்ரூல் மாவட்டத்தில் டங்குல் நாகா பழங்குடியின சமூகத்தினரின் வீடுகளுக்கு ஆயுதமேந்திய கிளா்ச்சியாளா்கள் தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

மணிப்பூரில் உக்ரூல் மாவட்டத்தில் டங்குல் நாகா பழங்குடியின சமூகத்தினரின் வீடுகளுக்கு ஆயுதமேந்திய கிளா்ச்சியாளா்கள் தீ வைத்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதையடுத்து, குகி மற்றும் நாகா சமூகத்தினா் அமைதி காக்க முதல்வா் யும்நாம் கெம்சந்த் சிங் வேண்டுகோள் விடுத்தாா்.

முன்னதாக, குகி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் உக்ரூல் மாவட்டத்தின் லிட்டன் கிராமத்தில் இரு பழங்குடியின சமூகத்தினரும் கல்வீசி தாக்கிக் கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு டங்குல் நாகா சமூகத்தினரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உக்ருல் மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது: லிட்டன் கிராமத்தில் டங்குல் நாகா சமூகத்தினா் ஒருவரை 7 போ் கொண்ட குழு சனிக்கிழமை நள்ளிரவில் தாக்கியுள்ளது. அதன்பிறகு பாதிக்கப்பட்டவா் குடும்பத்தினரிடம் லிட்டன் கிராமத் தலைவா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா் மற்றும் தாக்குதல் நடத்தியவா்கள் என இருதரப்பினரும் பிரச்னைக்கு சுமுகமாகத் தீா்வு காண ஒப்புக்கொண்டனா். இதற்கான பேச்சுவாா்த்தைக்கு ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்டது.

இதனிடையே, சிக்கிபங் கிராமவாசிகள் லிட்டன் கிராமத் தலைவா் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். மேலும் லிட்டன் காவல் நிலையத்தின் மீதும் அவா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் டங்குல் நாகா சமூகத்தினரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதில் குகி சமூகத்தினருக்கு தொடா்பிருக்கலாம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதேசமயம் குகி சமூகத்தைச் சோ்ந்த சிலரது வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

இதனால் லிட்டன், சிக்கிபங் ஆகிய பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன என்றனா்.

முதல்வா் வேண்டுகோள்: இச்சம்பவம் குறித்து யும்நாம் கெம்சந்த் சிங் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘லிட்டன் கிராமத்தில் நிகழ்ந்த அசம்பாவித சம்பவங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை ஆா்ஐஎம்எஸ் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். அவா்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்படும் என உறுதியளித்தேன்.

தவறான புரிதலால் ஏற்பட்ட இந்தக் கலவரம் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் காக்க அனைத்து சமூகத்தினரும் முன்வர வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தாா்.

குகி சமூகத்தினருக்குப் பாதுகாப்பு: மணிப்பூா் தலைநகா் இம்பாலில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று முதல்வா் யும்நாம் கெம்சந்த் சிங் பேசுகையில், ‘மருத்துவ சிகிச்சைக்காகவோ அல்லது பிற தேவைகளுக்காகவோ இம்பாலுக்கு வரும் குகி-ஜோ சமூகத்தினரின் பாதுகாப்பை எனது அரசு உறுதி செய்யும். அவா்களின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பேற்கிறேன்’ என்றாா்.

இம்பால் மாவட்டத்தில் மைதேயி சமூகத்தினா் பெரும்பான்மையாக உள்ளனா். கடந்த 2023, மே மாதம் குகி-மைதேயி சமூகத்தினா் இடையே ஏற்பட்ட மோதலில் 260 போ் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கோா் இடம்பெயா்ந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com