

உத்தரப் பிரதேசத்தில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் மோதி 6 பேர் படுகாயமடைந்த விவகாரத்தில் காரை ஓட்டிச்சென்றது தொழிலதிபரின் மகன் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொகுசுக் காரை ஓட்டுநர் மோகன் ஓட்டிச்சென்றதாகவும், விரைவில் அவர் சரணடைவார் என்றும் காவல் துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள குவால்டோலி பகுதியில் பிரபல தொழிலதிபரான கே.கே. மிஸ்ராவின் மகன் அதிவேகமாக ஓட்டிய சொகுசுக் கார் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
புகையிலை தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா, கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை பகல் 3.15 மணியளவில் லம்போர்கினி காரில் அதிவேகமாகச் சென்று விபத்து நேர்ந்துள்ளது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது முதலில் மோதி, பின்னர் சாலையோரம் இருந்த பாதசாரிகள் மீது மோதியது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்தவுடன் ஷிவம் மிஸ்ரா தப்ப முயற்சித்ததாகவும், காரின் கண்ணாடியை உடைத்த மக்கள் அவரை தாக்க முயற்சித்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
காவல் துறையினர் பறிமுதல் செய்த சிசிடிவி காட்சிகள் மற்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில் தொழிலதிபரின் மகன் ஷிவம் மிஸ்ரா காரை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.
எனினும், தொழிலதிபரின் குடும்பத்தினர் இதனை மறுத்துள்ளனர். விபத்து நேர்ந்தபோது புதிதாக சேர்ந்த ஓட்டுநர் துரை என்பவர் காரை ஓட்டிச்சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஓட்டுநர் துரை, இதுபோன்ற பல்வேறு தொழிபதிபர்கள் மற்றும் பிரபலங்களின் சொகுசுக் கார் விபத்துகளில் தொடர்புடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.