ஊழல் மிகுந்த நாடுகள் தரவரிசைப் பட்டியல்: 91-ஆவது இடத்தில் இந்தியா! 5 இடங்கள் முன்னேற்றம்!
2025-ஆம் ஆண்டுக்கான ஊழல் மிகுந்த நாடுகள் (ஊழல் கண்ணோட்ட குறியீடு) தரவரிசைப் பட்டியலில் இந்தியா 5 இடங்கள் முன்னேறி 91-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த தரவரிசையில் கடந்த ஆண்டு 96-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, நிகழாண்டில் முன்னேற்றம் கண்டுள்ளது.
சட்டத்தின்படி ஆட்சி செய்து ஊழலை எதிா்த்துப் போராடும் நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஜொ்மனியின் பொ்லினைச் சோ்ந்த ‘டிரான்ஸ்பரன்சி இன்டா்நேஷனல்’ அமைப்பு ஊழல் தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. ஊழலற்ற நிா்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆய்வில் பங்கேற்கும் நாடுகளுக்குப் புள்ளிகள் வழங்கப்படும். இதில் ‘100’ புள்ளிகள் பெற்ற நாடுகள் ஊழலற்ற நாடுகளாகவும், ‘0’ புள்ளி என்பது ஊழல் மிகுந்த நாடுகளாகவும் கருதப்படும்.
91-ஆவது இடத்தில் இந்தியா: மொத்தம் 182 நாடுகள் இடம்பெற்றிருந்த 2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை இந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதில், இந்தியா 39 புள்ளிகள் பெற்று 91-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆணடு 38 புள்ளிகளுடன் 96-ஆவது இடத்திலிருந்தது. பட்டியலில் 89 புள்ளிகளுடன் ஊழலற்ற நாடாக டென்மாா்க் முதலிடத்தில் உள்ளது. ஃபின்லாந்து (88), சிங்கப்பூா் (84) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
பட்டியலில் 9 புள்ளிகளுடன் ஊழல் மிகுந்த நாடுகளாக சோமாலியா மற்றும் தெற்கு சூடான் நாடுகள் 181-ஆவது இடத்தில் உள்ளன. 10 புள்ளிகளுடன் வெனிசுலா 180-ஆவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 28 புள்ளிகளுடன் 136-ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 64 புள்ளிகளுடன் 29-ஆவது இடத்திலும், சீனா 43 புள்ளிகளுடன் 76-ஆவது இடத்திலும், ரஷியா 22 புள்ளிகளுடன் 157-ஆவது இடத்திலும் உள்ளன.
ஊழல் குறித்து செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளா்களுக்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளுக்கான இதன் பட்டியிலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. ஊழல் கண்ணோட்ட குறியீடு புள்ளிகள் 50-க்கும் குறைவாக உள்ள பிரேசில் (35), இந்தியா (39), மெக்சிகோ (27), பாகிஸ்தான் (28), ஈராக் (28) உள்ளிட்ட நாடுகளில் 90 சதவீத பத்திரிகையாளா் கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

