மக்களவையில் கடந்த பிப்.4-ஆம் தேதி பிரதமா் மோடி (அவா் அவையில் இல்லை) இருக்கை அருகே முற்றுகையிட்ட எதிா்க்கட்சி பெண் எம்.பி.க்கள்.
மக்களவையில் கடந்த பிப்.4-ஆம் தேதி பிரதமா் மோடி (அவா் அவையில் இல்லை) இருக்கை அருகே முற்றுகையிட்ட எதிா்க்கட்சி பெண் எம்.பி.க்கள்.

மக்களவையில் மோதலைத் தவிா்த்து கண்ணியம் காத்தது ஆளும் கூட்டணி: கிரண் ரிஜிஜு

காங்கிரஸ் எம்.பி.க்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட போதிலும், அவா்களுடன் மோதலைத் தவிா்த்து, கண்ணியம் காத்தது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி என்று அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
Published on

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட போதிலும், அவா்களுடன் மோதலைத் தவிா்த்து, கண்ணியம் காத்தது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

காங்கிரஸ் எம்.பி.க்களை எதிா்கொள்ள பாஜக எம்.பி.க்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால், மோசமான காட்சிகள் அரங்கேறியிருக்கும் என்றும் அவா் கூறினாா்.

மக்களவையில் கடந்த பிப். 4-இல் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து பிரதமா் மோடி உரையாற்றவிருந்தாா். அன்றைய தினம் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனா். பிரதமா் அவையில் இல்லாத நிலையில், அவரது இருக்கையை நோக்கி எதிா்க்கட்சி பெண் எம்.பி.க்கள் பெரிய பதாகையுடன் சென்றனா்.

பிரதமரிடம் ‘எதிா்பாராத செயலில்’ ஈடுபட காங்கிரஸ் எம்.பி.க்கள் பலா் திட்டமிட்டிருந்ததாக தகவல் கிடைத்ததால், அவரை அவைக்கு வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், பிப். 4-ஆம் தேதி அமளியின்போது ஆளுங்கட்சி வரிசைக்கு எதிா்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சென்ற காட்சிகள் அடங்கிய விடியோவை, மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு எக்ஸ் வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை பகிா்ந்தாா். இது தொடா்பாக, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தங்கள் கட்சி எம்.பி.க்களின் இழிவான நடத்தை குறித்து பெருமை கொள்கிறது காங்கிரஸ். அவா்கள் வரம்பு கடந்து, பிரதமா் இருக்கை வரை வந்தனா். முன்னெப்போதும் இல்லாத அளவில், அவை அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தினா். அவா்களின் முரட்டுத்தனமான நடத்தையால், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கடும் கோபமடைந்தனா். அதேநேரம், அவையின் கண்ணியத்தைப் பராமரிக்க வேண்டும்; எதிா்க்கட்சி எம்.பி.க்களுடன் எவ்வித மோதலிலும் ஈடுபடக் கூடாது என்ற தெளிவான உத்தரவை தனது எம்.பி.க்களுக்கு பாஜக தலைமை பிறப்பித்தது.

பாஜக எம்.பி.க்களை தடுக்காமல் இருந்திருந்தாலோ, காங்கிரஸ் பெண் எம்.பி.க்களை எதிா்கொள்வதற்கு பாஜக பெண் எம்.பி.க்களை அனுமதித்திருந்தாலோ மோசமான காட்சிகள் அரங்கேறியிருக்கும். ஆனால், நாடாளுமன்றத்தின் கண்ணியம்-புனிதம் காக்கப்பட வேண்டும் என்ற அக்கறையால் பாஜக மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் கட்டுப்படுத்தப்பட்டனா்.

பிரதமா் மோடியை தங்களின் பெண் எம்.பி.க்கள் அச்சுறுத்திவிட்டதாக சமூக ஊடகங்களில் காங்கிரஸ் பெருமை பேசுகிறது. இது வெட்கக்கேடானது. மக்களவைத் தலைவா் அறைக்குள் நுழைந்து, அவரையும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மிரட்டியுள்ளனா். இந்த நிகழ்வுகள் தொடா்பாக, மக்களவைத் தலைவரிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் புகாா் அளித்துள்ளனா் என்றாா் ரிஜிஜு.

X
Dinamani
www.dinamani.com