நரவணேவை நம்ப மாட்டீர்களா? பொய் கூறுவாரா? ராகுல் கேள்வி!

நரவணே நூல் விவகாரத்தில் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகள்...
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
ராகுல் காந்தி (கோப்புப்படம்)ANI
Updated on
1 min read

இந்திய ராணுவ முன்னாள் தளபதி எம்.எம். நரவணே ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) சுயசரிதை நூல் விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

மக்களவையில், நரவணேயின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரிகளை மேற்கோள்காட்டி, 2020 ஆம் ஆண்டு லடாக் எல்லை விவகாரத்தில் சீனா உடனான மோதலின்போது பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாக ராகுல் காந்தி விமர்சித்துப் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, வெளியாகாத நூலை ராகுல் காந்தி மேற்கோள்காட்டியதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், இந்த நூல் இணையதளங்களில் விற்பனைக்குள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி நூலுக்கான உரிமத்தை வைத்துள்ள பென்குயின் ரேன்டம் ஹவுஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நரவணேவின் நூலை இன்னும் வெளியிடவில்லை என்று விளக்கம் அளித்திருந்தது.

இந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக வெளியாகாத முன்னாள் ராணுவத் தளபதி நரவணே நாலின் பிரதிகள் சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பதிலளித்த ராகுல் காந்தி தெரிவித்ததாவது:

“நரவணே வெளியிட்ட எக்ஸ் பதிவில், எனது நூலை வாங்குவதற்கு இந்த இணைப்பை பின்தொடரவும் என்று தெரிவித்துள்ளார். நரவணே பொய் சொல்கிறாரா? அல்லது பென்குயின் பொய் சொல்கிறதா? என்பதே எனது கேள்வி. முன்னாள் ராணுவத் தளபதி பொய் சொல்ல மாட்டார் என்று நான் நம்புகிறேன்.

புத்தகம் வெளியிடப்படவில்லை என்று பென்குயின் கூறுகிறார். ஆனால் புத்தகம் அமேசானில் கிடைக்கிறது. பென்குயின் நிறுவனத்தைவிட நரவணேவை அதிகம் நம்புகிறேன். நீங்கள் நரவணேவைவிட பென்குயின் நிறுவனத்தை நம்புகிறீர்களா?

பிரதமருக்கும், இந்திய அரசுக்கும் இடையூறு கொடுக்கக் கூடிய தகவல்களை தனது நூலில் நரவணே வெளியிட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன். பென்குயின் அல்லது ராணுவத் தளபதி, இவர்களில் யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Won't you trust Naravane? Will he lie? Rahul asks!

ராகுல் காந்தி (கோப்புப்படம்)
நரவணே புத்தகத்தை வெளியிட்டது யார்? காவல் துறை வழக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com