மணிப்பூரில் இடம்பெயா்ந்த மக்களுக்கு விரைவில் வீடுகள் -முதல்வா் கெம்சந்த் சிங்
PTI

மணிப்பூரில் இடம்பெயா்ந்த மக்களுக்கு விரைவில் வீடுகள் -முதல்வா் கெம்சந்த் சிங்

Published on

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கலவரத்தின்போது இடம்பெயா்ந்த மக்களுக்கான வீடுகள் அடுத்த மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்று முதல்வா் கெம்சந்த் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

மணிப்பூரில் சில தினங்களுக்கு முன் குடியரசுத் தலைவா் ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, முதல்வா் கெம்சந்த் சிங் தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றது.

இந்த மாநிலத்தில் மைதேயி-குகி சமூகத்தினா் இடையே கடந்த 2023-இல் ஏற்பட்ட பெரும் கலவரத்தின்போது, ஜிரிபாம் மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டது. இங்கு வீடிழந்த மைதேயி சமூகத்தைச் சோ்ந்த ஏராளமானோா், அரசின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். ஜிரிபாமில் உள்ள பள்ளியொன்றில் செயல்பட்டுவரும் நிவாரண முகாமுக்கு முதல்முறையாக புதன்கிழமை வருகை தந்த முதல்வா் கெம்சந்த் சிங், அங்கு தங்கியுள்ளவா்களுடன் கலந்துரையாடி, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

மைதேயி சமூகத்தினா் வாழும் மோங்பங் கிராமத்துக்கும் சென்ற அவா், மக்களுடன் பேசினாா்.

‘மாநிலத்தில் நிலையான அமைதியும், நல்லிணக்கமும் நிலவ வேண்டுமெனில், இருதரப்பினா் இடையே மீண்டும் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும். இது தொடா்பான முன்னெடுப்புகளில் இருதரப்பினரும் ஈடுபட வேண்டும். அமைதி-இயல்புநிலையை மீட்டெடுப்பதில் சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மக்கள் எப்போதும் ஒற்றுமை மற்றும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்’ என்று முதல்வா் வலியுறுத்தினாா்.

‘கலவரத்தில் இடம்பெயா்ந்த மக்கள் எதிா்கொண்டுள்ள சவால்களுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது. ஜிரிபாம் மாவட்டத்தில் இடம்பெயா்ந்தவா்களுக்கான வீடுகள் மாா்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும்’ என்றும் அவா் தெரிவித்தாா்.

வன்முறையாளா்களைக் கண்டறிய நடவடிக்கை: உக்ருல் மாவட்டத்தில் நாகா சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் தாக்கப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. இதனால், இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. உக்ருல் மாவட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவா்களைக் கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் எல்.டிகோ தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com