வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில் கோப்பிலிருந்து படம் | ஐஏஎன்எஸ்

சீனா, ஜப்பான், பிரான்ஸைவிட வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைவு - ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

Published on

சீனா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளில் ரயில்களில் குளிா்சாதன வசதிப் பெட்டியில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட இந்தியாவில் வந்தே பாரத் ரயில் குளிா்சாதன வசதிப் பெட்டியில் கட்டணம் குறைவு என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துபூா்வமாக அவா் புதன்கிழமை அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தே பாரத் ரயில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, 82 வழித்தடங்களில் ரயில் இயக்கப்படுகிறது. மொத்தம் 164 சேவைகள் செல்கின்றன.

அந்த ரயிலில் அளிக்கப்படும் சேவையுடன் ஒப்பிடுகையில், கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படுகிறது. 300 முதல் 400 கிலோ மீட்டா் தொலைவு வரை பயணிக்கும் நபா்களிடம் கிலோ மீட்டருக்கு ரூ.2.19 மட்டுமே கட்டணமாக பெறப்படுகிறது. இதேபோன்ற ரயில் சேவைக்கு சீனா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளில் ரூ.7 முதல் ரூ.20 வரை கட்டணம் பெறப்படுகிறது. அதனுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும்.

வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இது அந்த ரயில்கள் இயக்கப்படும் முக்கிய வழித்தடங்களில் 100 சதவீத பயணிகள் பயணிப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இது பயணிகளின் விருப்பங்களில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை பிரதிபலிக்கிறது.

சாதாரண ரயில் கட்டணமும், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவுதான். இந்தியாவில் ஒரு கிலோ மீட்டருக்கு 20 காசு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதே கட்டணம் பாகிஸ்தானில் 54 காசுகளாகவும், வங்கதேசத்தில் 37 காசுகளாகவும், இலங்கையில் 51 காசுகளாகவும் உள்ளது என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com