

நாடாளுமன்றம் தொடர்பான விடியோவை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எப்படி வெளியிட முடியும்? என காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சீன ஆக்கிரமிப்பு, இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் அவைக்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்பான விடியோக்களை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டு வருகிறார். இதற்கு காங்கிரஸ் தரப்பு எதிர்வினையாற்றி வருகிறது.
காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் இதுபற்றி பேசுகையில்,
"இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஏனெனில் இந்த அரசு , தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கு எதிரானது. இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் உழைப்பு தியாகம் செய்யப்படும். இது விவசாயிகளுக்கு எதிராக இந்த அரசால் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆயுதங்களில் ஒன்று.
ராகுல் காந்திக்கு எதிராக பாஜக ஒரு உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. ராகுல் காந்தியின் உரைக்கு அவர்களால்(பாஜக) பதிலளிக்க முடியுமா? நான் சவால் விடுகிறேன். ராகுல் காந்தி நேற்றைய உரையில் நாட்டுக்குத் தேவையான பிரச்னைகளைதான் எழுப்பினார். என்னுடைய கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்கவில்லை.
அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு கிரண் ரிஜிஜு ஒரு வீடியோவை வெளியிட்டார். நாடாளுமன்றம் தொடர்பான விடியோவை அவர் எப்படி பெற முடிந்தது? அவையின் சுமூகமான செயல்பாட்டிற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது அவரது கடமை. ஆனால் அமைச்சரே இதையெல்லாம் செய்கிறார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் இப்போது நாடாளுமன்றத்திற்கு எதிராக செயல்படுகிறார்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.