

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
4 தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; வரைவு விதை மசோதா, மின்சார சட்டத் திருத்த மசோதா, அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களும், விவசாயிகள் விரோத கொள்கைகளை கைவிடக் கோரி விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தொழிலாளர்கள், விவசாயிகளின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
”நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காக தெருக்களில் இறங்கி இன்று குரல் கொடுத்து கொண்டுள்ளனர்.
4 தொழிலாளர் சட்டங்களும் தங்கள் உரிமைகளை பலவீனப்படுத்தும் என்று தொழிலாளர்களும், வர்த்தக ஒப்பந்தங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று விவசாயிகளும் அஞ்சுகின்றனர்.
மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை பலவீனப்படுத்துவது அல்லது நீக்குவது கிராமங்களின் கடைசி ஆதரவையும் பறித்துவிடும்.
அவர்களின் எதிர்காலம் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டபோது, அவர்களின் குரல் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது.
மோடி தற்போது கேட்பாரா? அல்லது அவர் மீதான அழுத்தம் மிகவும் வலுவாக உள்ளதா?
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்னைகள் மற்றும் அவர்களின் போராட்டத்துடன் நான் உறுதியாக நிற்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.