

உத்தரப் பிரதேசத்தில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் மோதி 6 பேர் படுகாயமடைந்த விவகாரத்தில் காரை ஓட்டிச்சென்ற தொழிலதிபர் மகன் ஷிவம் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள குவால்டோலி பகுதியில் பிரபல தொழிலதிபரான கே.கே. மிஸ்ராவின் மகன் அதிவேகமாக ஓட்டிய சொகுசுக் கார் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
புகையிலை தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா, கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை பகல் 3.15 மணியளவில் லம்போர்கினி காரில் அதிவேகமாகச் சென்று விபத்து நேர்ந்துள்ளது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது முதலில் மோதி, பின்னர் சாலையோரம் இருந்த பாதசாரிகள் மீது மோதியது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்தவுடன் ஷிவம் மிஸ்ரா தப்ப முயற்சித்ததாகவும், காரின் கண்ணாடியை உடைத்த மக்கள் அவரை தாக்க முயற்சித்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
காவல் துறையினர் பறிமுதல் செய்த சிசிடிவி காட்சிகள் மற்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில் தொழிலதிபரின் மகன் ஷிவம் மிஸ்ரா காரை ஓட்டிச் சென்றது தெரியவந்தது.
இதனிடையே, காரை ஓட்டியது ஷிவம் அல்ல, அவரது ஓட்டுநர் துரை என்றும், காவல் நிலையத்தில் அவர் சரணடைந்ததாகவும் தகவல்கள் வெளியான நிலையில், காவல்துறைக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், விசாரணையை சரியாக மேற்கொள்ளதாக காவல் நிலைய அதிகாரி புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஷிவம் மிஸ்ராவை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இன்று காலை அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.