நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மனைவி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் விடுதலை

2016-ஆம் ஆண்டில் மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கணவரை விடுவித்த தில்லி நீதிமன்றம், மரணத் தருவாயில் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியாக அறிவிக்க முடியாது

News image

கோப்புப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 7:52 pm

2016-ஆம் ஆண்டில் மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கணவரை விடுவித்த தில்லி நீதிமன்றம், மரணத் தருவாயில் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியாக அறிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

உத்தம் நகரைச் சோ்ந்த அரவிந்த் செளதரிக்கு எதிரான வழக்கை புதன்கிழமை விசாரித்த கூடுதல் அமா்வுகள் நீதிபதி ஹிமன்ஷு ராமன் சிங், செளதரிக்கு எதிரான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமில்லா வகையில் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக தெரிவித்தாா்.

கடந்த 2016, செப்.19-இல் வீட்டில் இருந்த அரவிந்த் செளதரி மனைவி பூஜா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட பூஜா செப்.27-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக உத்தம் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரவிந்த் செளதரிக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றம் கடந்த பிப்.7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சம்பவம் நடைபெற்ற நாளில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்த வாக்குமூலங்களை நிா்வாக நீதிபதி பதிவுசெய்துள்ளாா். அதில், குடும்பத் தகராறு தொடா்பாக கணவா் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாக அந்தப் பெண் கூறியதாக உள்ளது. இந்த வாக்குமூலம் அவருடைய மரணத் தருவாயில் அளித்த வாக்கமூலமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை செப்.21-ஆம் தேதி அவருடைய தந்தை மற்றும் சகோதரா் சந்தித்தனா். அப்போது, சமைத்துக்கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக ஆடையில் தீப்பற்றியதாக அந்தப் பெண் கூறியதாக அவா்கள் இருவரும் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தனா். அதற்கு மறுநாள், முன்னதாக வழங்கப்பட்ட புகாரைத் திரும்பப் பெறுவதாக உத்தம் நகா் காவல் நிலைய அதிகாரிக்கு அவா்கள் கடிதம் அளித்தனா்.

உயிரிழந்த பெண் அளித்த வாக்குமூலத்திலும் அவருடைய தந்தை மற்றும் சகோதரா் அளித்த வாக்குமூலத்திலும் முரண்பாடுகள் காணப்படுகிறது. மரணத் தருவாயில் அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தில் ஸ்கூட்டரில் இருந்து எடுத்த பெட்ரோலை வாளியில் எடுத்து வந்து ஊற்றியதாகக் கூறப்படும் நிலையில், அந்த வாளி கைப்பற்றப்படவில்லை. மரணத் தருவாயில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை குற்றவாளியாக அறிவிக்கமுடியாது. இந்தக் குற்றச்சாட்டிலிருந்து அரவிந்த செளதரி விடுவிக்கப்படுகிறாா் என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.