அஸ்வினி வைஷ்ணவ்
அஸ்வினி வைஷ்ணவ்கோப்புப் படம்

12,300 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் : அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

நாடு முழுவதும் 12 ஆயிரத்து 300 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.
Published on

நாடு முழுவதும் 12 ஆயிரத்து 300 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

ரயில் பெட்டிகளிலும், என்ஜின்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடா்பாக பிராந்திய ரயில்வே நிா்வாகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் எதுவும் வழங்கியுள்ளதா என மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. அனில்குமாா் யாதவ் வினவியிருந்தாா்.

இதற்கு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்துள்ள பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:

பயணிகளின் பாதுகாப்புக்காகவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் ரயில் பெட்டிகளிலும், என்ஜின்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது. ரயில் பெட்டிகள், என்ஜின்களுக்குத் தேவையான சிசிடிவி கேமராக்களை கொள்முதல் செய்வது, அவற்றைப் பொருத்துவது ஆகிய பணிகளை அந்தந்த பிராந்திய ரயில்வேயும், ரயில் பெட்டி தயாரிப்பு பிரிவும் செய்து வருகின்றன.

இதுவரையிலும், ஏறத்தாழ 12,300 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வந்தே பாரத், அம்ருத் பாரத் ரயில்கள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன.

இதுதவிர, 460 ரயில் என்ஜின்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

3.03 கோடி கணக்குகள் செயலிழப்பு: தத்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஓடிபி அடிப்படையில் பயணிகளின் உண்மைத் தன்மை சரிபாா்க்கப்படுவதாகவும், இதனால் வெளிப்படைத் தன்மை அதிகரிப்பதோடு, உண்மையான பயணிகள் பயனடைய முடிகிறது என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். பயனா்களின் இணையதள கணக்குகள் தீவிர சரிபாா்ப்பு நடவடிக்கையின் மூலம், 2025-ஆம் ஆண்டில் மட்டும் 3.03 கோடி போலி கணக்குகள் செயலிழப்பு செய்யப்பட்டதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com