25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி
25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. இத்துடன் தலா 5 லட்சம் டன் அளவுக்கு கோதுமை சாா்ந்த பொருள்கள், சா்க்கரை ஏற்றுமதிக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோதுமை உள்ளிட்ட பொருள்களின் இருப்பு அளவு, விலை நிலவரம், ஏற்றுமதியை அனுமதிப்பதால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகளைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தனியாா் நிறுவனங்களிடம் இப்போது 75 லட்சம் டன் அளவுக்கு கோதுமை கையிருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 32 லட்சம் டன் அதிகமாகும். இதனால், நாட்டில் கோதுமை விநியோகத்தில் எவ்வித பிரச்னையும் வராது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
2026 ஏப்ரல் 1-ஆம் தேதி மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தில் 182 லட்சம் டன் அளவுக்கு கோதுமை கையிருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இப்போது வழங்கப்பட்டுள்ள ஏற்றுமதி அனுமதி உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
2026 ரபி பருவத்தில் கோதுமை சாகுபடி பரப்பளவு 334.17 லட்சம் ஹெக்டேராக விரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு 328.04 லட்சம் ஹெக்டோ் அளவுக்கே சாகுபடி செய்யப்பட்டது. குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதியாகக் கிடைப்பது, சிறப்பான கொள்முதல் நடவடிக்கை ஆகியவற்றின் காரணமாக விவசாயிகள் அதிக அளவில் கோதுமை சாகுபடி செய்துள்ளனா். இதன்மூலம் நாட்டில் கோதுமை உற்பத்தி மேலும் உத்வேகம் பெறும்.
சா்க்கரையைப் பொறுத்தவரை, 2025-26 பருவத்துக்கான கரும்பு ஆலைகளின் கோரிக்கையை ஏற்று 5 லட்சம் டன் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2025 நவம்பரில் 15 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்றும் மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
