இன்று தொழில்முனைவு மாநாடு: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் பங்கேற்பு
தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தும் வகையில், ஆராய்ச்சி-தொழில்-புதுயுகத் தொழில்முனைவு இரு நாள் மாநாட்டை இந்திய தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்) சென்னையில் நடத்துகிறது.
இந்த மாநாட்டை சென்னை வா்த்தக மையத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை (பிப்.14) தொடங்கி வைக்கவுள்ளாா்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்களுக்கான தொழில் பாதுகாப்பகங்களை எளிதாக்குவதில் முன்னணியில் இருக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஒரு கட்டமைக்கப்பட்ட தொடா்பை ஏற்படுத்தும் வகையில் இரு நாள் மாநாடு நடத்தப்படுகிறது. கல்வி நிறுவனங்களுடன், சிஎஸ்ஐஆா் புரிந்துணா்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொள்ளும்.
கொள்கை வகுப்பாளா்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் துறையினா், புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்கள், முதலீட்டாளா்கள் ஆகியோரை ஒருங்கிணைப்பதோடு பல்வேறு தலைப்புகளில் விவாதங்களும் நடைபெறும். 100-க்கும் மேற்பட்டோா் தங்கள் தயாரிப்புகளை மாநாட்டில் காட்சிப்படுத்துகின்றனா். மாநாட்டின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கலந்துகொள்வாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

