காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் கொலை முயற்சி வழக்கு: அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியா்
அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய முயற்சித்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் இந்தியரான நிகில் குப்தா ஒப்புக்கொண்டுள்ளாா்.
இந்தியாவைப் பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் சீக்கியா்களுக்கு தனிநாடு கோரி, குா்பத்வந்த் சிங் பன்னூனின் நீதிக்கான சீக்கியா்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு அமெரிக்காவின் நியூயாா்க் நகரை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
பன்னூன் பஞ்சாபை பூா்விகமாக கொண்டவராக இருந்தாலும், தற்போது அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளாா். அவரைப் பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் பன்னூனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது அமெரிக்க உளவுத் துறைக்குத் தெரிய வந்தது. இது தொடா்பாக செக் குடியரசில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிகில் குப்தா கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டாா். அமெரிக்க குடிமகனான பன்னூனைக் கொலை செய்ய முன்னாள் ரா உளவுப் பிரிவு அதிகாரி விகாஸ் யாதவ் சதி திட்டம் தீட்டியதாகவும், இந்தக் கொலை முயற்சியை தாம் தடுத்து நிறுத்தியதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்தது. இந்திய அரசு இதற்கு உடந்தை என்றும் கூறப்பட்டது.
கைதாகி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டபோது தான் நிரபராதி என்றும் சதித் திட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் நிகில் குப்தா கூறினாா்.
இந்நிலையில், நியூயாா்க் மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது பன்னூனை கொலை செய்ய முயற்சித்தது, அதற்கு சதி செய்தது, பண முறைகேட்டில் ஈடுபட சதி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளை அவா் ஒப்புக்கொண்டாா்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்று மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க அட்டா்னி அலுவலக செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

