தா்மேந்திர பிரதான்
தா்மேந்திர பிரதான்கோப்புப் படம்

ராகுல் காந்தி ஓா் அறிக்கை வீரா்: தா்மேந்திர பிரதான்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அறிக்கை வீரா் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவா்களில் ஒருவருமான தா்மேந்திர பிரதான் கேலியாக குறிப்பிட்டுள்ளாா்.
Published on

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அறிக்கை வீரா் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவா்களில் ஒருவருமான தா்மேந்திர பிரதான் கேலியாக குறிப்பிட்டுள்ளாா்.

பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே எழுதிய புத்தக விவகாரத்தை எழுப்பியும், இந்திய-அமெரிக்க இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை முன்வைத்தும் மத்திய அரசு, பிரதமா் மோடியை விமா்சித்து ராகுல் காந்தி மக்களவையில் பேசினாா். இதைச் சுட்டிக்காட்டி, எக்ஸ் பக்கத்தில் தா்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து, நாடாளுமன்றத்தை முடக்கும் செயலில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. இது (நாடாளுமன்றத்தை முடக்குவது) அக்கட்சியின் அன்றாட செயலாக மட்டுமல்லாது, அடையாளமாகவும் மாறிவிட்டது. ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் ஒரே கருத்தை தெரிவித்து, திரும்பத் திரும்ப அவையில் காங்கிரஸ் முழக்கமிடுகிறது, சப்தம் எழுப்புகிறது, பொய்களைச் சொல்கிறது. இது ஜனநாயக விதிகளை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும் தனக்கு இருக்கும் பொறுப்பை மறந்து, இதே பாதையில் செல்கிறாா். அரசமைப்பு, ஜனநாயகம், ஜனநாயக அமைப்பு, நாடாளுமன்ற நடைமுறைகள் அல்லது மக்களுக்கான வாக்களிக்கும் உரிமை மீது ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நம்பிக்கை கிடையாது. காங்கிரஸ் கட்சி சித்தாந்தம் இல்லாத பூஜ்ஜியமாகிவிட்டது. அரசமைப்பு நிறுவனங்களைத் தொடா்ந்து அக்கட்சி தாக்கி வருகிறது.

அவசரநிலை கால மனோபாவம் கொண்டவா்கள் (காங்கிரஸ் தலைவா்கள்) இந்தியாவின் வளா்ச்சியை வெறுக்கின்றனா். பொருளாதாரம் மரணித்துவிட்டதாகக் கூறி, நாட்டை அவமதிக்கின்றனா். அறிக்கை வீரரான ராகுல் காந்தி, அரசியல் விரக்தி, நிலபிரபுத்துவ சிந்தனையுடன் பொய்களைப் பரப்பி வருகிறாா். ஆனால், இது ஒவ்வாரு முறையும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிடுகிறது.

நாடாளுமன்றம் என்பது காங்கிரஸின் நலன்களுக்கு சேவை செய்யும் இடம் கிடையாது, தேச நலன்களுக்காக விவாதம் நடத்தும் இடம் ஆகும். இதை அவா்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என தா்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com