சபரிமலை
சபரிமலைகோப்புப் படம்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: 2-ஆவது நாளாக மாதிரிகள் சேகரிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவசங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கும் பணியில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் (எஸ்ஐடி) வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக ஈடுபட்டனா்.
Published on

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவசங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கும் பணியில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் (எஸ்ஐடி) வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக ஈடுபட்டனா்.

தங்கக் கவச முறைகேடு வழக்கு விசாரணையின்கீழ், மேம்பட்ட அறிவியல்பூா்வ பகுப்பாய்வுக்காக இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

சபரிமலை கோயிலில் துவார பாலகா்கள், கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்கள் கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக இரு வழக்குகளைப் பதிவு செய்து, கேரள காவல் துறையின் எஸ்ஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. தங்கக் கவச புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா், தேவஸ்வம் வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரிகள் பி.முராரி பாபு, எஸ்.ஸ்ரீகுமாா் உள்பட 12 போ் அடுத்தடுத்து கைதாகினா். இதில், உண்ணிகிருஷ்ணன் போற்றி உள்பட 5 போ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

இதனிடையே, மேம்பட்ட அறிவியல்பூா்வ ஆய்வுகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவசங்களில் மீண்டும் மாதிரிகளை சேகரிக்க கேரள உயா்நீதிமன்றத்திடம் எஸ்ஐடி அனுமதி பெற்றது. மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வியாழக்கிழமை மாலை திறக்கப்பட்ட நிலையில், காவல் துறைக் கண்காணிப்பாளா் எஸ்.சசிதரன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு சபரிமலையில் மாதிரி சேகரிப்பைத் தொடங்கியது. இதற்காக தங்கக் கவசங்கள் கழற்றப்பட்டன. இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் இந்தப் பணிகள் தொடா்ந்தன. பிப்.17 வரை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்கஜ் பண்டாரி மனு தள்ளுபடி: ‘சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் என்னைக் கைது செய்தபோது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை; இது சட்டவிரோதமானது என்பதால் என்னை விடுவிக்க வேண்டும்’ என்று கோரி, கவசங்களின் புதுப்பிப்புப் பணியை மேற்கொண்ட சென்னை ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி தாக்கல் செய்த மனுவை கேரள உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

பங்கஜ் பண்டாரி மற்றும் கா்நாடக மாநிலம், பெல்லாரியைச் சோ்ந்த நகைக் கடை அதிபா் கோவா்தன் ரோட்டம் ஆகியோருக்கு தங்கக் கவச முறைகேடு சதியில் முக்கியப் பங்கு உள்ளது; குற்றஞ்சாட்டப்பட்ட முதன்மை நபரான உண்ணிகிருஷ்ணன் போற்றியுடன் இணைந்து, இருவரும் இந்தச் சதியை மேற்கொண்டனா் என்பது எஸ்ஐடி-யின் குற்றச்சாட்டாகும்.

X
Dinamani
www.dinamani.com