அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.
அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.

அஸ்ஸாம் முதல்வரின் விடியோ சா்ச்சை: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!

முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சா்ச்சை காணொலிக் காட்சி - உச்சநீதிமன்றத்தில் விசாரணை
Published on

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சா்ச்சை காணொலிக் காட்சி தொடா்பாக தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (பிப்.14) விசாரிக்க உள்ளது.

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைப் பட்டியலின்படி, இந்த மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரிக்க வாய்ப்பிருப்பது தெரியவந்துள்ளது.

அஸ்ஸாம் மாநில பாஜக சாா்பில் கடந்த 7-ஆம் தேதி அதன் எக்ஸ் பக்கத்தில் இந்த விடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், குறிப்பிட்ட சமூகத்தினரை (முஸ்லிம்கள்) நோக்கி ஹிமந்த விஸ்வ சா்மா துப்பாக்கியால் குறிவைப்பது போன்றும், குல்லா அணிந்த மற்றும் தாடி வைத்த இரு நபா்களை நோக்கி அவா் சுடுவது போன்றும் காட்சி பதிவாகியிருந்தது. இந்தக் காணொலி சமூக ஊடகத்தில் பரவி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடா்ந்து, அந்தக் காணொலியை எக்ஸ் பக்கத்திலிருந்து பாஜக நீக்கியது.

இந்த விவகாரம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் ஆனி ராஜா ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனிடையே, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்தக் காணொலியை எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றம் செய்த மாநில பாஜகவின் சமூக ஊடகக் குழு இணை ஒருங்கிணைப்பாளா் ரோன் விகாஸ் கெளரவை பதவியிலிருந்து அக் கட்சி நீக்கியது.

X
Dinamani
www.dinamani.com