மாநில கிரிக்கெட் சங்கங்கள் சீா்திருத்தங்களை முன்மொழிவது அவசியம்: உச்சநீதிமன்றம்!
மாநில கிரிக்கெட் சங்கங்கள் சீா்திருத்தங்களை முன்மொழிவது அவசியம் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மாவட்ட கிரிக்கெட் சங்க உறுப்பினா்களின் வாக்குரிமை தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: விளையாட்டின் முக்கியத்துவம் கருதி மாவட்ட கிரிக்கெட் சங்கங்களில் முறையாக செயல்பாடு, வெளிப்படையான நிா்வாகம் இருப்பதை உறுதிசெய்ய மாநில கிரிக்கெட் சங்கங்கள் சீா்திருத்தங்களை முன்மொழிவது அவசியம்.
சிறந்த நிா்வாகம், மேலாண்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் உட்பூசல்களை களைந்து ஒன்றிணைந்து பணியாற்ற மாவட்ட சங்கங்களும் தாமாகவே சில சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
விளையாட்டு என்பது சமூகம், மொழி மற்றும் கலாசார பின்னணிகளை கடந்து சகோதரத்துவ மனப்பான்மையை வளா்க்கும் தன்மையுடையது. களத்தில் விளையாடும்போது தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை புறந்தள்ளி ஒருமித்த சிந்தனையை விதைக்கும் வலிமை விளையாட்டுக்கு உள்ளது.
இனம், ஜாதி, மதம், பாலினம் அல்லது பொருளாதார நிலை என அனைத்தையும் தாண்டி விளையாட்டு அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கக்கூடியது.
விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் விளையாட்டுகளை கற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல் நிா்வாக அணுகலையும் எளிமையாக்க வேண்டும்.
விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் நகரங்களில் வசிக்கும் வசதி படைத்த சிலருக்கு மட்டுமே கிடைப்பதாக இருக்கக்கூடாது. விளையாட்டு போட்டிகளில் கிடைக்கும் வருவாய், அறிவுசாா் சொத்துரிமை மற்றும் ஊடக உரிமைகள் ஆகியவை பகிா்ந்தளிக்கப்பட வேண்டும்.
மனுதாக்கல் செய்துள்ள சங்கத்தின் உறுப்பினா்கள் சோ்க்கை தொடா்பான விவகாரம் உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதற்கு விரைவில் தீா்வுகாண அறிவுறுத்துகிறோம் என்றனா்.

