தேசியவாத காங்கிரஸ் தலைவராக விரைவில் சுநேத்ரா பதவியேற்பார்: பிரஃபுல் படேல் தகவல்!

தேசியவாத காங்கிரஸ் தலைவராக மகாராஷ்டிர துணை முதல்வர் சுநேத்ரா பவார் விரைவில் பதவியேற்பார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான பிரஃபுல் படேல் தெரிவித்துள்ளார்.
அஜீத் பவாருடன் சுனேத்ரா பவார்
அஜீத் பவாருடன் சுனேத்ரா பவார்கோப்புப் படம்
Updated on
1 min read

தேசியவாத காங்கிரஸ் தலைவராக மகாராஷ்டிர துணை முதல்வர் சுநேத்ரா பவார் விரைவில் பதவியேற்பார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான பிரஃபுல் படேல் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மகாராஷ்டிர துணை முதல்வராகவும் இருந்த அஜீத் பவார் அண்மையில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மனைவி சுநேத்ரா பவார், புதிய துணை முதல்வராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் செயல் தலைவருமான பிரஃபுல் படேல், மும்பையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடக் கூடிய ஒரே வேட்பாளர் சுநேத்ரா பவார்தான். அவர் விரைவில் முறைப்படி அப்பதவியை ஏற்பார்.

அவருக்குப் பின்னால் நாங்கள் அனைவரும் அணிவகுத்து அவர் தலைவராக வருவதற்கு உரிய நடைமுறைகளை நிறைவு செய்வோம். கட்சியை வலுப்படுத்துவதற்கே உடனடி முன்னுரிமை அளிக்கப்படும். மகாராஷ்டிரத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் புணே மாவட்ட ஊராட்சியிலும், கோலாப்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் எங்கள் கட்சி கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது.

சுநேத்ரா பவார் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகிய தலைவர்களை தில்லியில் சந்தித்தார் என்று பிரஃபுல் படேல் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

இறப்பை அரசியலாக்குவதா?: அஜீத் பவாரின் இறப்பை அரசியலாக்கும் முயற்சிகளை தேசியவாத காங்கிரஸ் விமர்சித்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவான ரோஹித் பவார் இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், அஜீத் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஆனந்த் பராஞ்ஜ்பே, மும்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில் "அஜீத் பவார் உயிரிழந்த விமான விபத்து தொடர்பான சம்பவங்களை அரசியலாக்குவதை எங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது. அவ்விபத்து தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. குடும்பம் என்பது ரத்த உறவுகள் மட்டுமில்லை.

பாஜகவுடன் அணிசேர்வது என்ற மாறுபட்ட முடிவை அஜீத் பவார் கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூலை 2ஆம் தேதி எடுத்தபோது அவருடன் நின்றவர்களும் அவரது குடும்பத்தினர்தான்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com