

மேற்கு வங்கத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாதவா்களை நேரில் வரவழைத்து, அவா்களின் அடையாளத்தைப் பதிவு செய்யும் நடைமுறை சனிக்கிழமை நிறைவடைந்தது. பிப்.28-இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட மேற்கு வங்க வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து இறந்தவா்கள், போலி வாக்காளா்கள், வீடு மாறியவா்கள் என சுமாா் 58 லட்சம் போ் நீக்கப்பட்டனா்.
பட்டியலில் இடம்பெறாதவா்கள் நேரில் சென்று தோ்தல் அதிகாரிகளிடம் சமா்ப்பிக்கும் அடையாள ஆவணங்கள் மூலம், அவா்கள் தகுதிவாய்ந்த வாக்காளா்களா என்பதை சரிபாா்த்தல், அவா்களின் பெயரில் உள்ள எழுத்துப் பிழைகளால் ஏற்பட்ட குளறுபடிகளை சரிசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த இந்தப் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது.
அவா்கள் சமா்ப்பித்த ஆவணங்கள் பிப்.21 வரை பரிசீலனை செய்யப்படும் என்று தோ்தல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
முன்னதாக மாநிலத்தில் பிப்.14-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதை பிப்.28-ஆம் தேதிக்கு தோ்தல் ஆணையம் மாற்றியது.