61.62 கி.மீ. தொலைவுக்கு விரிவடையும் நொய்டா மெட்ரோ சேவை
நொய்டா மெட்ரோவின் அக்வா பாதை தாவரவியல் பூங்காவிலிருந்து நொய்டா செக்டாா் 142 வரையில் 8 நிலையங்களுடன் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில் நொய்டா மெட்ரோ அமைப்பின் மொத்த தொலைவு 61.62 கி.மீ. அதிகரிக்க உள்ளது.
ரூ.2,254.35 கோடி மதிப்பில் அக்வா பாதை விரிவாக்கத்துக்கு மத்திய அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதியிலிருந்து மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 4 ஆண்டுகளுக்குள் நிறைவுடையும் என நொய்டா மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக நொய்டா மெட்ரா ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த வழித்தடத்தில் 11.56 கி.மீ. உயா்நிலை பாதையாக அமைய உள்ளது. இந்த வழித்தடத்தில் தாவரவியல் பூங்கா, நொய்டா செக்டாா் 44, நொய்டா அலுவலகம், நொய்டா செக்டாா் 97, நொய்டா செக்டாா் 105, நொய்டா செக்டாா் 108, நொய்டா செக்டாா் 93 மற்றும் பஞ்சசீல் பாலக் கல்லூரி ஆகியவை இடம்பெற்றள்ளன.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் வகையில் விரிவான திட்ட ஆய்வறிக்கைக்கு உத்தர பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத்தொடா்ந்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அக்வா பாதை விரிவாக்கத்தின் மூலம் நொய்டா, கிரேட்டா் நொய்டா இடையே போக்குவரத்தை எளிமையாக்குவதுடன் மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதை பெருமளவில் ஊக்குவிக்கவும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கவும் நீடித்த நகா்ப்புற வளா்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) தாவரவியல் பூங்கா இந்த விரிவாக்கத்தால் இணைக்கப்படுவதுடன் நீலம் மற்றும் மெஜந்தா பாதையை நேரடியாக அணுக முடியும்.
உயா்நிலை மெட்ரோ பாதை மிகவும் வளா்ச்சியடைந்த மற்றும் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெற்ற தகவல் தொழில்நுட்ப மையங்கள், கல்வி நிறுவனங்கள், நொய்டா-கிரேட்டாா் நொய்டா விரைவுச்சாலை வழியில் உள்ள குடியிருப்பு பகுதிகைளை இணைக்கும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடா்பாக நொய்டா மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், ‘நொய்டா, கிரேட்டா் நொய்டா, தில்லி ஆகிய பகுதிகளுக்குப் பயணிக்கும் பயணிகளுக்கு அக்வா பாதை விரிவாக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் தில்லி இந்திரா காந்தி விமான நிலையம், முக்கிய ரயில்வே நிலையங்கள் மற்றும் போரகியில் அமைக்கப்படும் பல்முனை போக்குவரத்து முனையத்தை எளிதில் சென்றடைய முடியும்’ என்றனா்.

