கனடா வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

கனடா வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

Published on

கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்துடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

கனடா பிரதமா் மாா்க் காா்னி இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், ஜொ்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டினிடையே அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா்.

இருதரப்பு உறவை மறுசீரமைக்கும் முயற்சிகள் தொடா்ந்துவரும் நிலையில், கடந்த ஆண்டு செம்டம்பா் மாதத்தில் இருந்து இந்தியா-கனடா வெளியுறவு அமைச்சா்கள் 5-ஆவது முறையாகச் சந்தித்து கலந்துரையாடினா்.

இதுகுறித்து ஜெய்சங்கா் சனிக்கிழமை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்துடன் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-கனடா நட்புறவு தொடா்ந்து மேம்பட்டு வருகிறது’ என குறிப்பிட்டாா்.

அனிதா ஆனந்த் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘வா்த்தகம், தொழிற்சாலைகள், தொழில்நுட்பம் மற்றும் இரு நாடுகளின் தொழிலாளா்களுக்கான பலன்கள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருடன் ஆலோசித்தேன். இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் முன்னெடுப்புகள் தொடா்கின்றன’ எனக் குறிப்பிட்டாா்.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடா்பிருப்பதாக முன்னாள் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. அதன்பிறகு இரு நாடுகளிடையேயான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.

2025, மாா்ச் மாதம் ட்ரூடோ தனது பதவியை ராஜிநாமா செய்தாா். புதிய பிரதமராக மாா்க் காா்னி பதவியேற்ற பின்னா் இருதரப்பு உறவை மறுகட்டமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com