

ம.ஆ.பரணிதரன்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள தீர்மான நோட்டீஸ் நடைமுறைகள், கடந்த ஏழு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் தவிர்க்கப்படும் மக்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேவையை உணர்த்தியுள்ளன.
ஓம் பிர்லாவை பதவிநீக்கம் செய்யக் கோரும் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் மீது மார்ச் 9-ஆம் தேதி விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை முடிவடையும் வரை ஓம் பிர்லாவால் அவையை வழிநடத்த முடியாது. அதே சமயம், அவரது இருக்கையில் அமர்ந்து மக்களவையை மூத்த உறுப்பினர்கள் குழு வழிநடத்தி வருகிறது.
16}ஆம் மக்களவை (2014-2019) வரை துணைத் தலைவர் பதவி இருந்தது. அப்போது மக்களவைத் தலைவராக சுமித்ரா மகாஜனும், துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மு.தம்பிதுரையும் இருந்தனர். 2019-2024 வரையிலான 17-ஆவது மக்களவையில் துணைத் தலைவர் பதவி அதன் முழு பதவிக் காலமும் நிரப்பப்படவில்லை. இது 18-ஆவது மக்களவையிலும் (2024-29) தொடர்கிறது.
இதனால், அவையை வழிநடத்தும் தலைவர்கள் குழு (பேனல் ஆஃப் சேர்மன்) தங்களுக்குள்ளாகவே நேரத்தை ஒதுக்கிக்கொண்டு முதல் பகுதி பட்ஜெட் கூட்டத்தொடர் அலுவல்களை வழிநடத்தியது.
இதைச் சுட்டிக்காட்டும் மக்களவை காங்கிரஸ் தலைமைக் கொறடாவும் விருதுநகர் தொகுதி எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், "நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மக்களவை துணைத் தலைவர் பதவி ஏழு ஆண்டுகளாக காலியாக இருக்கிறது. இது ஏதோ சிறிய நடைமுறைக் குறைபாடு எனக் கடந்துவிட முடியாது. இந்திய அரசமைப்பின் 93-ஆவது பிரிவு, மக்களவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் இருவரையும் தேர்ந்தெடுக்க வேண்டுமென வரையறை செய்துள்ளது' என்றார்.
மக்களவைத் தலைவரால் அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எட்டு உறுப்பினர்களில் மாணிக்கம் தாகூரும் ஒருவர். எட்டு எம்.பி.க்களின் பதவி நீக்க நடவடிக்கை மற்றும் பெண் எம்.பி.க்களுக்கு எதிராகவும், ஆளும்கட்சிக்கு சாதகமாகவும் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீûஸ எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 118 பேர் அளித்துள்ளனர்.
இந்திய அரசமைப்பின் விதி 93}இன்படி மக்களவைத் தலைவர், துணைத் தலைவர் பதவிகள் காலியாகும்போது, அவை விரைவாக நிரப்பப்பட வேண்டும். ஆனால், அதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில், சமீபத்திய நிகழ்வுகள் மக்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேவையை உணர்த்துகின்றன.
மக்களவைப் பதவி நெறிகளின்படி தலைவருக்கு அடுத்த உயரிய பதவியாக துணைத் தலைவர் பதவி உள்ளது. ஒரேயொரு வித்தியாசம், மக்களவைத் தலைவர் எந்தச் சூழலிலும் உறுப்பினராக சக உறுப்பினர்களுடன் அமர மாட்டார். விவாதங்களில் பங்கேற்க முடியாது. ஆனால், மக்களவைத் தலைவர் அவையை வழிநடத்தும்போது, அதன் துணைத் தலைவர் வழக்கமான உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்படுவார். முக்கிய விவாதங்களிலும் பங்கேற்றுப் பேச முடியும்.
மேலும், மக்களவை கலைக்கப்பட்ட பிறகும்கூட, மக்களவைத் தலைவரைப் போலவே துணைத் தலைவர் புதிய மக்களவை தேர்வாகி புதிய துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அந்தப் பதவியில் தொடர்வார். மக்களவைத் தலைவர் இல்லாதபோது அவையை வழிநடத்துவது, உறுப்பினர்களின் ஆட்சேபகர பேச்சு மற்றும் பதிவுகளை நீக்குவது, புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, அவர்களின் நோட்டீஸ் மற்றும் பதவி விலகல் கடிதங்களைப் பெறுவது என அவரது அதிகாரங்களைக் குறிப்பிடலாம்.
ஆனால், இருவரில் ஒருவர் மீதோ, இருவரின் மீதோ பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்படும்போது அதன் முடிவுகள் வெளியாகும்வரை அவர்களால் அவையை வழிநடத்த முடியாது என அரசமைப்பு விதி 96 கூறுகிறது.
மக்களவை மரபின்படி அதிலும் 11-ஆவது மக்களவைக்குப் பிறகு துணைத் தலைவர் பதவிக்குரியவர் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். கட்சி சார்பற்ற செயல்பாட்டை ஊக்குவிக்க இந்த வழக்கம் மேற்கொள்ளப்பட்டாலும் இதை அரசமைப்பு விதிகள் கட்டாயப்படுத்தவில்லை.
இந்நிலையில், மக்களவை துணைத் தலைவர் பதவி தொடர்ந்து நிரப்பப்படாமல் இருப்பது, மக்களவைத் தலைவர் வசமே அனைத்து அதிகாரங்களும் குவிவதற்கு காரணமாகலாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
"இந்த விஷயத்தில் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் அரசமைப்பு விதிகள் திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளன. அசாதாரண சூழ்நிலையில் முடிவெடுக்க வேண்டிய துணைத் தலைவர் பதவி இல்லாமலேயே மக்களவை இயங்குவது கவலைக்குரியது' என்கிறார் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன்.
இதற்குத் தீர்வாக மக்களவைத் தலைவர் தேர்தல் நடந்து புதிய தலைவர் பதவியேற்றுக்கொண்ட உடனேயே, அடுத்த 60 நாள்களுக்குள் மக்களவை துணைத் தலைவர் பதவி நிரப்பப்பட ஏதுவாக அரசமைப்பு விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
மக்களவைத் தலைவருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நோட்டீஸ் விவகாரத்தில் முடிவெடுக்கப்போவது யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. மக்களவைத் தலைவர் அல்லாத நேரத்தில் அவையை வழிநடத்தும் பணியை மூத்த உறுப்பினர்கள் குழு மேற்கொள்கிறது. ஆனால், இக்குழுவால் மக்களவைத் தலைவர் மீதான நோட்டீûஸயோ, நடவடிக்கையையோ தன்னிச்சையாக அனுமதிக்க அதிகாரம் இல்லை. அப்படியென்றால் முடிவெடுப்பது யார் என்ற குழப்பம் நிலவுகிறது.
துணைத் தலைவர் இருந்திருந்தால் இந்த நடைமுறைகளை ஒருங்கிணைத்திருப்பார். இது விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்கின்றனர் எம்.பி.க்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.