

ஏஐ வேலைகளைப் பறிக்குமா? என்ற இளைஞர்களின் கவலைகளுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு கடந்த 2023 ஆம் ஆண்டில் பிரிட்டனின் பக்கிங்ஹாமிலும், 2024 ஆம் ஆண்டில் தென்கொரிய தலைநகர் சியோலிலும், 2025 ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, 4 வது செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு தில்லியில் மூன்றுநாள்கள் நடைபெறுகிறது.
தலைநகர் தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஐ.நா. சபை பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்ரெஸ், பிரேஸில் அதிபர் லூலா டாசில்வா உள்பட 45 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
35 வயதுக்குள்பட்ட 65 சதவிகித இளைஞர்களைக் கொண்ட இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் ஏஐ-யால் அதிகளவில் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவது குறித்து பேசினார்.
செய்யறிவால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களும், செய்யறிவால் அதிகரித்துள்ள பணி நீக்கத்தால் இளைஞர்கள் பலர் வேலையை இழந்துள்ளது பற்றியும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், “தயாராக இருப்பதுதான் பயத்திற்கு மாற்றுவழி. தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளைத் தான் உருவாக்கும். அது வேலைகளை அழிக்காது. அதைத்தான் வரலாறும் கூறுகிறது.
சில வேலைகளில் மாற்றங்கள் இருந்தாலும், இந்திய பொருளாதாரத்தில் புதிய வேலைகளை உருவாக்கும். பல நூற்றாண்டுகளாகவே தொழில்நுட்பம் வளர்ந்து வேலைகளை அழித்துவிடும் என்ற பயம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
புதுமை நிகழும் போது புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகிக் கொண்டுதான் இருக்கும். ஏஐ யுகத்திலும் இது உண்மையாக இருக்கும். இந்தியா தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தாமல் உருவாக்கவும் வேண்டும். சுயசார்பு இந்தியாவை நோக்கிய இந்தியாவின் வளர்ச்சி அடிப்படைக் கொள்கைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது” எனப் பேசினார் பிரதமர் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.