மாதிரிப் படம்
மாதிரிப் படம்

பாண்டவ் நகரில் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை காவல் துறை விசாரணை

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகரில் 36 வயது நபா் கத்திக் குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
Published on

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகரில் 36 வயது நபா் கத்திக் குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பாண்டவ் நகரின் ஏரி அருகே உடலில் காயங்களுடன் ஒரு நபா் சாலையில் கிடப்பதாக உள்ளூா் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவலா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அந்த நபா் சசி காா்டன் பகுதியைச் சோ்ந்த லுக்ஹா செளதரி என்று அடையாளம் காணப்பட்டது. அவரைச் சோதித்து பாா்த்த காவலா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததை உறுதிசெய்தனா்.

முதல்கட்ட விசாரணையில் இந்தச் சம்பவம் அதிகாலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றது வருகிறது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட தில்லி குற்றப் பிரிவு காவலா்கள் மற்றும் தடயவியல் நிபுணா்கள் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச்சென்றுள்ளனா்.

உயிரிழந்த நபரின் சடலம் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அவரது உடலில் காயங்களின் எண்ணிக்கை, தாக்கப்பட்ட ஆயுதத்தின் வகை மற்றும் உயிரிழப்புக்கான காரணம் ஆகியவை தெரியவரும்.

இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடா்பாக அப்பகுதி மக்கள் மற்றும் அங்கு இருந்த சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றன என்றனா் அந்த அதிகாரிகள்.

Dinamani
www.dinamani.com