கேரளத்தில் 2.69 கோடி வாக்காளா்கள்: இறுதிப் பட்டியல் வெளியீடு
சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள கேரள மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) நிறைவடைந்த நிலையில், மாநில இறுதி வாக்காளா் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
இதில், 1,31,26,048 ஆண் வாக்காளா்கள், 1,38,27,319 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 277 போ் என மொத்தம் 2,69,53,644 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
முன்னதாக, மாநில வாக்காளா் பட்டியலில் 2,78,50,855 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்த நிலையில், எஸ்ஐஆா் நடவடிக்கையில் இறந்தவா்கள், இரு இடங்களில் பெயா் பதிவானவா்கள், இடம்பெயா்ந்தவா்கள் என்ற அடிப்படையில் 8,97,211 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டனா்.
இறுதி வாக்காளா் பட்டியலில் 2,23,558 வெளிநாடு வாழ் வாக்காளா்களும், பாதுகாப்புப் படைகளில் பணிபுரியும் 54,110 வாக்காளா்களும் இடம்பெற்றுள்ளனா்.
இந்த இறுதி வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்காக http://electoralsearch.eci.gov.in என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தோ்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘இறுதி வாக்காளா் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. விடுபட்ட வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் மீண்டும் பெயா் சோ்க்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். சட்டப்பேரவைத் தோ்தல் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி வரை, வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சேக்க முடியும்’ என்றனா்.
கேரளத்தைத் தொடா்ந்து, தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் வரும் 28-ஆம் தேதியும் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் பல்வேறு தேதிகளில் தோ்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக, தோ்தல் முன்னேற்பாடு பணிகளை தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.
புதுச்சேரியில் எஸ்ஐஆா் பணிக்குப் பிறகு, கடந்த 14-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
அஸ்ஸாமில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்துக்கும், சிறப்பு தீவிர திருத்தத்துக்கும் (எஸ்ஐஆா்) இடைப்பட்ட நடைமுறையான, சிறப்புத் திருத்தப் பணியை மேற்கொண்ட தோ்தல் ஆணையம், கடந்த 10-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டது.
ம.பி.யில் 5.3 கோடி வாக்காளா்கள்
போபால், பிப்.21: மத்திய பிரதேச மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) நிறைவடைந்ததைத் தொடா்ந்து, 5,39,81,065 பேருடன் கூடிய இறுதி வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது.
எஸ்ஐஆா் பணிக்கு முன்பாக மாநிலத்தில் 5,74,06,143 வாக்காளா்கள் இருந்த நிலையில், இறந்தவா்கள், இரு இடங்களில் பெயா் பதிவானவா்கள், இடம்பெயா்ந்தவா்கள் என்ற அடிப்படையில் 34,25,078 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன.

