

கேரள மாநிலம், கொச்சி மெட்ரோ ரயிலின் தூணில் சிக்கிய பூனை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரிகள் கூறுகையில், கலூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கம் மெட்ரோ நிலையம் அருகே ஒரு தூணில் பூனை இருப்பதை அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் கவனித்தனர். உடனே பூனையை மீட்க வியாழக்கிழமை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து, பூனையை மீட்க விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கம் சனிக்கிழமை முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், பூனை கர்டரில் உள்ள இடைவெளிகளுக்குள் நகர்ந்து சென்றது. மேலும் ஹைட்ராலிக் கிரேனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் செயல்பாட்டை இடைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை ஊழியர்கள் மாலையில் மற்றொரு முயற்சியை மேற்கொண்டனர். கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் அதிகாரிகள் 15 நிமிடங்களுக்கும் மேலாக மின் இணைப்பை துண்டித்து பூனையை மீட்க ஒத்துழைப்பு அளித்தனர். இருந்தபோதிலும், பூனையைக் கண்டுபிடிக்க முடியாததால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. பூனை, உயிர்வாழ தூணின் மேல் அதிகாரிகள் உணவை விட்டுச் சென்றனர். அதற்குள், விலங்கு ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியைத் தொடருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். பின்னர், சனிக்கிழமை இரவு கொச்சி மெட்ரோ நிர்வாகத்தின் தினசரி நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு, நள்ளிரவில் பூனையைக் கண்டுபிடித்து மீட்க மீண்டும் ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மீட்புப் பெட்டி மற்றும் வலைகளுடன் கூடிய இரண்டு பணியாளர்கள் தூணின் உச்சியை அடைந்து, பூனையைக் கண்டு அதை மீட்டனர். பூனை கீழே இறக்கப்பட்டபோது, சம்பவ இடத்தில் கூடியிருந்தவர்கள் அதிகாரிகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். மீட்கப்பட்ட பூனை விலங்கு மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டது என்று தெரிவித்தனர். காந்தி நகர் நிலையத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், மெட்ரோ தூணில் சிக்கிய பிறகு பூனை மீட்கப்படுவது இது மூன்றாவது முறை என்று கூறினார். இதனிடையே தமிழ்நாட்டின் குணா குகைகளில் படமாக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான 'மஞ்ஞுமல் பாய்ஸ்' கதாபாத்திரத்தின் நினைவாக பூனைக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் "சுபாஷ்" என்று பெயரிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.