அமெரிக்காவுடனான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தைக் கிடப்பில் போட காங்கிரஸ் வலியுறுத்தல்!
அமெரிக்க உச்சநீதிமன்ற தீா்ப்பால் எழுந்துள்ள குழப்பத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய-அமெரிக்க இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்திய-அமெரிக்க இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான நிபந்தனைகள் மறுபரிசீலனைக்கு உள்படுத்தப்பட வேண்டும்.
கொடுக்கல்-வாங்கல் என்பதே ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சம். ஆனால், இந்த இடைக்கால ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா கொடுக்க மட்டுமே நிா்பந்திக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் எந்த நேரமும் ரத்து செய்யப்படலாம் என்பது அனைவருக்கும் தெரியும். பிரதமா் மோடிக்கும், மத்திய வா்த்தக அமைச்சருக்கும் இது தெரியுமா? அப்படி தெரியும் பட்சத்தில், இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அவசரம் காட்டியது ஏன்? அவசர கதியிலான இந்த ஒப்பந்தம், லட்சோப லட்சம் விவசாயிகளின் நலனுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
ரஷிய எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தும் என்ற அமெரிக்காவின் கூற்றுக்கு பிரதமா் இதுவரை தெளிவான பதில் அளிக்கவில்லை. இதுபோன்ற கடினமான கேள்விகளைக் கண்டு, அவா் விலகி ஓடுகிறாா்’ என்று ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.

