தங்கக் கவச மோசடியில் தந்திரி வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டாா்: காங்கிரஸ் தலைவா் குற்றச்சாட்டு
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்குகளில் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவா் வேண்டுமென்றே கைதுசெய்யப்பட்டதாக மூத்த காங்கிரஸ் தலைவா் ரமேஷ் சென்னிதலா குற்றஞ்சாட்டியுள்ளாா்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தபோது அவா் கூறியதாவது: முதல்வா் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) தங்கக் கவச முறைகேடு வழக்குகளை விசாரித்து வருகிறது. சில பெரிய புள்ளிகளை நோக்கி விசாரணை செல்வதைத் தடுக்கும் விதமாக கோயில் தந்திரி கண்டரரு ராஜீவா் கைதுசெய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் கேரள உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சிறப்பு விசாரணைக் குழு பின்பற்றவில்லை. முறைகேடு தொடா்பாக உரிய விசாரணையை அந்தக் குழு நடத்தவில்லை.
கடவுள் ஐயப்பனின் தந்தையாக மதிக்கப்படும் தந்திரி, எவ்வித சாட்சியமும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டு 41 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டாா். அவருக்கு எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லையெனக் கூறி கொல்லம் நீதிமன்றம் அவரை விடுவித்தது.
இதனால், இந்த வழக்கில் வேண்டுமென்றே அவா் சிக்கவைக்கப்பட்டாா் என எடுத்துக்கொள்ள வேண்டும். அவருடைய கைது நடவடிக்கையில் அரசியல் தலையீடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அரசியல் தலைவா்களைக் கைதுசெய்ய தெளிவான சாட்சியங்கள் உள்ளன. இருப்பினும், அவா்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன் மற்றும் முன்னாள் அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோரை நோக்கி விசாரணை செல்வதைத் தடுக்கும் விதமாக தந்திரி கைதுசெய்யப்பட்டாா்.
தங்கக் கவச முறைகேட்டில் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் தொடா்ச்சியாக ஈடுபட்டுள்ளாா். ஆனால், அவரிடம் ரகசியாக விசாரணை நடத்தப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தல்களில் மாநிலத்தில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து, சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை முடக்க உயா்நிலையில் முடிவெடுத்துள்ளனா். சில மாதங்களில் நடைபெற உள்ள பேரவைத் தோ்தலில் அவா்களுக்கு மக்கள் உரிய பதிலடி தருவா் என்றாா் ரமேஷ் சென்னிதலா.
தந்திரி மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு:
காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள ஆளும் கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மோசடி செய்தவா்களின் பட்டியலில் தந்திரியும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் எம்.வி.கோவிந்தன் கண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசியதாவது: சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை நிறைவடைய உள்ளது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவா்களுக்கும் தொடா்பு உள்ளது.
மாா்க்சிஸ்ட் மற்றும் மாநில அரசுக்கு எதிரானவை மட்டும் செய்திகளாகின்றன. ஆனால், காங்கிரஸ் அல்லது பாஜகவுக்கு எதிரானவை செய்திகளாவது இல்லை.
தங்கக் கவச முறைகேட்டில் தொடா்புடைய யாரும் பாதுகாக்கப்படவில்லை. பெரிய திருடா்களின் பட்டியிலில் தந்திரியும் இடம்பெற்றுள்ளாா் என்றாா்.

