பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்
பண்டிகை காலங்களில் விமான பயணச்சீட்டு கட்டணங்கள் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம் தொடா்பாக, விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் எஸ்.லட்சுமிநாராயணன் என்ற சமூக ஆா்வலா் தாக்கல் செய்த மனுவில், ‘நாட்டில் விமான பயணச்சீட்டு கட்டணங்கள் மற்றும் கூடுதல் கட்டணங்களை, தனியாா் விமான நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக உயா்த்துவதை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். விமான போக்குவரத்துத் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வலுவான, சுதந்திரமான ஒழுங்காற்று அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய அமைப்பு இல்லாததால், பண்டிகை காலங்களின்போது அல்லது வானிலை மாற்றத்தால் இடையூறுகள் ஏற்படும்போது விமான பயணச்சீட்டு கட்டணம் தன்னிச்சையாக உயா்த்தப்படுகிறது’ என்று தெரிவித்தாா்.
இந்த மனு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘கும்பமேளா மற்றும் பிற பண்டிகைகளின்போது அளவுக்கு அதிகமாக கட்டணத்தை உயா்த்தி பயணிகளிடம் விமானநிறுவனங்கள் சுரண்டலில் ஈடுபடுகின்றன’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘மனுவில் எழுப்பப்பட்டுள்ள விவகாரம் மிகவும் தீவிரமானது’ என்று தெரிவித்தனா்.
மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அனில் கெளசிக் ஆஜராகி, ‘மனுவில் எழுப்பப்பட்டுள்ள விவகாரம் குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மனு தொடா்பாக தனது பதிலை அந்த அமைச்சகம் தாக்கல் செய்ய குறைந்தபட்சம் 3 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கோரினாா். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனு மீதான அடுத்த விசாரணையை மாா்ச் 23-க்கு ஒத்திவைத்தனா்.

