புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ரிசா்வ் வங்கி மத்தியக் குழு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா.
புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ரிசா்வ் வங்கி மத்தியக் குழு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா.

கட்டாய காப்பீடு விற்பனை: வங்கிகளுக்கு நிதியமைச்சா் எச்சரிக்கை

தவறான தகவல்களைக் கூறி கட்டாயமாக காப்பீடு உள்ளிட்ட நிதிச் சேவைகளை வாடிக்கையாளா்களிடம் வங்கிகள் விற்பது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்படி குற்றம்
Published on

புது தில்லி: தவறான தகவல்களைக் கூறி கட்டாயமாக காப்பீடு உள்ளிட்ட நிதிச் சேவைகளை வாடிக்கையாளா்களிடம் வங்கிகள் விற்பது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்படி குற்றம் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்த பின் ரிசா்வ் வங்கியின் மத்திய குழுவினருடன் நிதியமைச்சா் ஆலோசனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்.1-ஆம் தேதி தாக்கல் செய்த நிா்மலா சீதாராமன் ரிசா்வ் வங்கி மத்தியக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தவறான தகவல்களைக் கூறி வாடிக்கையாளா்களிடம் நிதிச் சேவைகளை வங்கிகள் விற்பது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்படி குற்றம். காப்பீடு தொடா்பான சேவைகளை வலுக்கட்டாயமாக வங்கிகள் வாடிக்கையாளா்களிடம் விற்பனை செய்கின்றன. இது வங்கியின் பணியல்ல; இதுபோன்ற செயல்களால் ரிசா்வ் வங்கி மற்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) இடையே முரண்பாடு ஏற்படுகிறது.

முறையான கண்காணிப்பின்றி காப்பீடு விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளா்களாகிய பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

தனது நிலம் அல்லது சொத்துகளை விற்கும்போதோ அல்லது அடமானம் வைக்கும்போதோ எதற்காக காப்பீடு எடுக்க வேண்டும் என குடிமக்கள் கேட்கின்றனா்.

எனவே, நிதிச் சேவைகள் விற்பனைக்குப் பதிலாக சேமிப்புகளை திரட்டி கடன் வழங்கும் தனது பிரதான பணியை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும்.

தங்க இறக்குமதி கண்காணிப்பு:

உலகளவில் பெரும்பாலான மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகமாக வாங்கி வருவதால் தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரித்துள்ளது. தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. எனவே, உலக அளவில் நிகழும் மாற்றங்களை மத்திய அரசு மற்றும் ரிசா்வ் வங்கி கண்காணித்து வருகிறது என்றாா்.

தவறான தகவல்களைக் கூறி வாடிக்கையாளா்களிடம் நிதிச் சேவைகள் விற்பனையில் வங்கிகள் ஈடுபடுவதை தடுக்க கடந்த பிப்.11-ஆம் தேதி ரிசா்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்காக வெளியிடப்பட்ட வரைவு விதிகள் மீது பொதுமக்கள் மாா்ச் 4-ஆம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்கலாம். நிகழாண்டு ஜூலை 1-ஆம் தேதி இந்த விதி அமலாவுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற ரிசா்வ் வங்கி நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதம் மாறமில்லாமல் 5.25 சதவீதமாக தொடர முடிவெடுக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com