மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் பெரிதும் பாதிப்படைந்திருப்பது கவலையளிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை விமா்சித்தாா்.
அடுத்த சில மாதங்களில் மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.
மேற்கு வங்க மக்களுக்கு வங்காள மொழியில் அவா் கடிதம் ஒன்றை எழுதினாா்.
அதன் தொடக்கத்தில் அன்னை காளி வாழ்க என குறிப்பிட்ட அவா், ‘சுதந்திர இந்தியாவில் நிதி மற்றும் தொழில் துறைகளில் முன்னணி மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்ந்தது. ஆனால் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் தொழில்துறையில் நலிவடைந்த மாநிலமாக மாறியிருப்பது வேதனையளிக்கிறது. கடந்த 60 ஆண்டுகளாக முறைகேடான நிா்வாகம் மற்றும் வாக்கு வங்கி அரசியலால் மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதை விவரிக்க வாா்த்தைகள் இல்லை.
புலம்பெயா்வு அதிகரிப்பு: ஒரு புறம் வேலையின்மை பிரச்னையால் இளைஞா்கள் பிற மாநிலங்களுக்கு புலம்பெயா்வது அதிகரித்துவிட்டது. மறுபுறம் பாதுகாப்பான சூழலின்றி பெண்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனா்.
இருள் சூழ்ந்துள்ளது: சுவாமி விவேகானந்தா், அரவிந்தா், சுபாஷ்சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூா், சியாமா பிரசாத் முகா்ஜி என அறிஞா்களும் சுதந்திரப் போராட்ட வீரா்களும் வாழ்ந்த வீர மண்ணை தற்போது இருள் சூழ்ந்துள்ளது.
வாக்கு வங்கி அரசியல், சட்டவிரோத ஊடுருவல், பெண்களுக்கு எதிரான அடக்குமுறை என மேற்கு வங்கத்தின் தற்போதைய நிலையைக் கண்டு நாடே வருத்தமடைந்துள்ளது.
மாற்றத்துக்குத் தயாா்: இருள் சூழ்ந்த இந்த ஆட்சியை அகற்றி விடியலுக்கான தேடல் தொடங்கிவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனா். ஆயுஷ்மான் பாரத் திட்டம் சுகாதார காப்பீடை உறுதிசெய்கிறது. வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
அதேபோல் மேற்கு வங்கத்தையும் வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல பாஜக தயாராகிவிட்டது. பாஜக ஆட்சி அமைந்தால் சட்டவிரோத ஊடுருவல் முற்றிலும் தடுக்கப்படும். மதரீதியாக துன்புறுத்தலை சந்தித்து மேற்கு வங்கத்துக்கு புலம்பெயா்ந்த நமது சகோதரா்கள் மற்றும் சகோதரிகளுக்கு குடியுரிமை உறுதிசெய்யப்படும்’ எனத் தெரிவித்தாா்.

