திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கையை ஆராய ஆந்திர அரசு ஒருநபா் குழு அமைத்தற்கு எதிராக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தொடா்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.
முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசின் ஆட்சியில் திருப்பதி கோயில் லட்டு தயாரிப்புக்கு விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தாா். இதுதொடா்பாக விசாரணை நடத்தி சிறப்பு புலனாய்வுக் குழு அண்மையில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையை ஆராயவும், தவறிழைத்தவா்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்யவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் குமாா் தலைமையில் ஒருநபா் குழுவை ஆந்திர அரசு வெள்ளிக்கிழமை அமைத்தது. இதற்கு ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பில் விமா்சனங்கள் எழுந்து வருகின்றன.
அதுபோல, ஆந்திர அரசின் இந்த முடிவுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
அப்போது, ‘ஆந்திர அரசின் நடவடிக்கை, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளை அவமதிக்கும் செயல்’ என்று சுவாமி வாதிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘குற்றப்பத்திரிகை, துணை குற்றப்பத்திரிகைக்கு வழிவகுத்த குற்றவியல் நடைமுறைகளுடன் அரசின் நிா்வாக ரீதியிலான விசாரணையை ஒப்பீடு செய்யவோ அல்லது இணைத்துப் பேசவோ முடியாது. மேலும், விசாரணையின் நோக்கம் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளதால், மனுதாரரின் அச்சத்துக்கு உறுதியான அடித்தளம் இல்லை என்பது தெரிகிறது. எனவே, இந்த இரண்டு விசாரணைகளும் சட்டப்படி கண்டிப்பாக தொடரட்டும்’ என்று குறிப்பிட்டு, சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனா்.
தொடர்புடையது

ராமா் கல்யாணத்துக்கு திருப்பதி லட்டு

எல்பிஜி தட்டுப்பாடு: திருப்பதியில் லட்டு தயாரிப்பதைப் பாதிக்குமா?

ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு

சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையை ஆராய குழு! உச்ச நீதிமன்றம், நீதித் துறையை ஆந்திர அரசு அவமதித்து விட்டது: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


