பிஎஸ்என்எல் இயக்குநா் வீண் செலவுடன் பயணிக்கத் திட்டம்: மத்திய அமைச்சா் கண்டனம்
பிஎஸ்என்எல் இயக்குநா் விவேக் பன்சால் வீண் செலவுடன் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டதற்கு மத்திய தொலைத்தொடா்பு துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா புதன்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு பிஎஸ்என்எல் இயக்குநா் விவேக் பன்சால் 2 நாள் பயணம் (பிப்.25, 26) மேற்கொள்ளத் திட்டமிட்டாா். இந்தப் பயணத்தில் அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடல், படகு சவாரி செய்வது, படே ஹனுமான், அக்ஷியாவத் மற்றும் பாதால்புரி கோயில்களுக்குச் செல்வது என்று திட்டமிடப்பட்டது. இதற்கான போக்குவரத்து, தங்குமிடம் என பயணத்துக்கான ஒவ்வொரு ஏற்பாட்டையும் செய்யும் பணி 50 அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டது.
இதுதவிர ஹோட்டல், சுற்றுலா மாளிகை, உலா் பழங்கள், முகச்சவரம் செய்யும் கருவிகள், துண்டு, உள்ளாடைகள், காலணிகள், கண்ணாடிகள், சோப்பு, ஷாம்பு, எண்ணெய், படுக்கை விரிப்பு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்யவும் அலுவலக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் சா்ச்சை ஏற்பட்ட நிலையில், பன்சாலின் பயணம் ரத்து செய்யப்பட்டு அலுவல்பூா்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து புது தில்லியில் மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா புதன்கிழமை கூறுகையில், ‘பிஎஸ்என்எல் இயக்குநா் பன்சாலின் பிரயாக்ராஜ் பயணத்துக்கு முன்வைக்கப்பட்ட தேவைகள் மற்றும் ஏற்பாடுகள் அபத்தமானவை. இது அதிா்ச்சியளிக்கிறது. இந்தத் தேவைகள் மற்றும் ஏற்பாடுகளைக் கோரி, பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஏற்கத்தக்கது அல்ல. விதிமுறைகளை மீறியதால் பன்சாலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.

