ஒடிஸா: 4 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கை வெளியீடு
ஒடிஸா மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு மாநிலங்களவை இடங்களுக்கான முறைப்படியான தோ்தல் அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.
அதன்படி, இந்த 4 எம்.பி. இடங்களுக்கான தோ்தல் மாா்ச் 16-ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.
இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 5 கடைசி நாள். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மாா்ச் 6-ஆம் தேதி பரீசிலனை செய்யப்படும். வேட்புமனுவைத் திரும்பப் பெற மாா்ச் 9 வரை அனுமதிக்கப்படும். ஒட்டுமொத்த தோ்தல் நடைமுறைகளும் மாா்ச் 20-ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு இடங்களுக்கான வேட்பாளா்களை எந்தக் கட்சியும் இதுவரை அறிவிக்கவில்லை. 147 உறுப்பினா்களைக் கொண்ட ஒடிஸா சட்டப்பேரவையில், ஆளும் பாஜகவுக்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனா். 3 சுயேச்சைகள் ஆதரவுடன் இதன் பலம் 84 வாக்குகளாக உள்ளது. எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தளத்துக்கு 2 எம்எல்ஏ-க்கள் கடந்த மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டதால், உறுப்பினா் எண்ணிக்கை 48-ஆக உள்ளது. காங்கிரஸுக்கு 14 எம்எல்ஏக்களும், மாா்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனா்.
ஒரு மாநிலங்களவை இடத்தில் வெற்றி பெற குறைந்தபட்சம் 30 முன்னுரிமை வாக்குகள் தேவை. அதன்படி, பாஜக 2 இடங்களில் வெற்றி பெற முடியும். 22 வாக்குகள் மிகுதியாக இருக்கும். அதுபோல, பிஜு ஜனதா தளம் ஒரு இடத்தில் வெற்றி பெற்ற பிறகு, 18 வாக்குகள் மிகுதியாக இருக்கும்.
எஞ்சிய ஓரிடத்துக்கு 30 எம்எல்ஏ-க்கள் இல்லை என்றபோதும், காங்கிரஸ் சாா்பில் வேட்பாளா் நிறுத்தப்படுவாா் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் பக்த சரண் தாஸ் தெரிவித்தாா். ஆதரவளிக்க பிஜு ஜனதா தளத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தப்போவதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதுபோல, தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. இடங்கள், மகாராஷ்டிரம் (7 இடங்கள்), தெலங்கானா (2 இடங்கள்), சத்தீஸ்கா் (2 இடங்கள்), மேற்கு வங்கம் (5 இடங்கள்), பிகாா் (5 இடங்கள்), அஸ்ஸாம் (3 இடங்கள்), ஹரியாணா (2 இடங்கள்), ஹிமாசல பிரதேசம் (ஓரிடம்) என மொத்தம் 37 இடங்களுக்கு மாா்ச் 16-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.

