

என்சிஇஆர்டி 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்துக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (பிப். 26) உத்தரவிட்டது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பிரிவில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றதாக வெளியான தகவலின் அடிப்படையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (பிப். 26) விசாரணை மேற்கொண்டது.
அப்போது, அப்பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு உச்சநீதிமன்றம் கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன், நீதித்துறைக்கு எதிரான ஆழ்ந்த கண்ணோட்டத்துடன் தீட்டப்பட்ட சதி இதுவென்றும், திட்டமிட்டே இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்விவகாரத்தை நீதித்துறை கவனத்துக்கு எடுத்துச்சென்றமைக்காக ஊடகத்துறைக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் நன்றியையும் பதிவு செய்தார்.
அதைத் தொடர்ந்து, சமூக அறிவியல் புத்தகத்தை பதிப்பதற்கோ வெளியிடுவதற்கோ தடை விதித்து தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. மேலும், இப்புத்தகத்திலுள்ள ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை பொதுவெளியில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உரிய விளக்கமளிக்க என்சிஇஆர்டி இயக்குநருக்கும் பள்ளிக்கல்வித் துறை செயலருக்கும் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இத்தகைய செயலுக்குக் காரணமானவர்கள் மீது ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கூடாதென நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.