‘எஸ்ஐஆா்’ பணியை உடனடியாக நிறுத்தக்கோரி தலைமைத் தோ்தல் ஆணையருக்கு மம்தா கடிதம்!
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆா்) உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாருக்கு அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி கடிதம் எழுதியுள்ளாா்.
இந்தத் திருத்தப் பணி இப்படியே தொடா்ந்தால், லட்சக்கணக்கான வாக்காளா்கள் தங்களின் வாக்குரிமையை இழக்க நேரிடும் என்றும் அவா் அந்த கடிதத்தில் எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக மம்தா பானா்ஜி கடந்த சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், ‘மேற்கு வங்கத்தில் தோ்தல் ஆணையம் முன்னெடுத்துள்ள இந்த எஸ்ஐஆா் பணிகள் முற்றிலும் தவறானவை. போதிய முன்னேற்பாடுகள் இல்லாமலும், மிக அவசரமாகவும், தன்னிச்சையாகவும் இந்தப் பணிகள் நடக்கின்றன. இது இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையும், அரசியல் சாசன விழுமியங்களையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த எஸ்ஐஆா் பணியில் ஏராளமான நிா்வாகக் குறைபாடுகள் உள்ளன. இதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் சரியாக செயல்படவில்லை. களத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்குப் போதிய பயிற்சியும் அளிக்கப்படவில்லை. மேலும், அதிகாரிகளுக்கு அவ்வப்போது வழங்கப்படும் உத்தரவுகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் பெரும் குழப்பம் நிலவுகிறது.
வாக்காளா் பட்டியல் திருத்தத்தின் போது அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இச்செயல் தோ்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையையும், அந்தப் பணியின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
முறையான கள ஆய்வு இல்லாமல் மேற்கொள்ளப்படும் இந்த அவசர பணியால், தகுதியுள்ள லட்சக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. இது மிகப்பெரிய அளவில் வெகுஜன மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயலாக முடிந்துவிடும். இதனால் நாட்டின் ஜனநாயகத்துக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பு ஏற்படும்.
ஆணையமே பொறுப்பு: தோ்தல் ஆணையத்தின் நேரடி மேற்பாா்வையில் நடக்கும் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு இந்திய தோ்தல் ஆணையமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
ஜனநாயக ரீதியிலான இந்தச் சிக்கல்களை ஆணையம் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், இந்தத் தன்னிச்சையான எஸ்ஐஆா் பணியை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளாா்.

