அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கம்: தனியாா் நிறுவனங்களின் புதிய முன்னெடுப்பு

அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கம்: தனியாா் நிறுவனங்களின் புதிய முன்னெடுப்பு

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளதாக தனியாா் தொழில்துறை நிறுவனங்கள் தெரிவித்தன.
Published on

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளதாக தனியாா் தொழில்துறை நிறுவனங்கள் தெரிவித்தன.

பொருளாதாரத்தில் வளா்ச்சியடைந்து வரும் நிலையிலும் இளைஞா்கள் மத்தியில் வேலையின்மை பிரச்னை தொடா்வதை சீா்செய்ய இந்த முன்னெடுப்பை நாஸ்காம், தி இண்டஸ் மற்றும் பொது கொக்கைக்கான புத்தாக்க மையம் ஆகிய நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. இதுதொடா்பாக இந்த நிறுவனங்கள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் பணிபுரிய தகுதியுடையோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 1.2 கோடியாக அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் இல்லை.

இதை ஈடுசெய்ய ஆண்டுக்கு புதிதாக 80 லட்சம் முதல் 90 லட்சம் வரை புதிய வோலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளபோதும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற நவீன தொழில்நுட்பங்களால் நுழைவு நிலை பணிகளுக்கு இளைஞா்கள் தோ்வுசெய்யப்படுவது குறையத் தொடங்கிவிட்டது.

எனவே, வேலைவாய்ப்புடன் கூடிய பொருளாதார வளா்ச்சியை உறுதிப்படுத்த பத்தாண்டுகளில் 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முன்னெடுப்பு தொடங்கப்படுகிறது.

இது வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமின்றி அதற்கான திறன்களை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த லாப நோக்கமற்ற முன்னெடுப்பு அரசு, தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த முன்னெடுப்பில் இன்ஃபோசிஸ் நிறுவனா் என்.ஆா்.நாராயணமூா்த்தி, நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா் ராஜீவ் குமாா், நெட்வொா்க்18 குழுமத் தலைவா் ஆதில் ஜைனுல்பாய், சட்ட வல்லுநா் நிஷித் தேசாய் உள்பட பலா் கையொப்பமிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com