அல்-ஃபலா பல்கலைக்கழகத்தை 
அமலாக்கத் துறை முடக்க வாய்ப்பு

அல்-ஃபலா பல்கலைக்கழகத்தை அமலாக்கத் துறை முடக்க வாய்ப்பு

தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பை தொடா்ந்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தை அமலாக்கத் துறை முடக்க வாய்ப்பு.
Published on

தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பை தொடா்ந்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தை அமலாக்கத் துறை முடக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமாா் 150 மீட்டா் தொலைவில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியது.

ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து நடத்திய அந்தத் தற்கொலை தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பலா், அல்-ஃபலா பல்கலைக்கழகத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகப் பொய்யான தகவலை தெரிவித்தும், தேசிய உயா் கல்வி நிறுவன மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் அளித்த அங்கீகாரம் குறித்து தவறான விளக்கத்தை அளித்தும் அல்-ஃபலா பல்கலைக்கழகம் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

ரூ.415 கோடிக்கு முறைகேடு: இந்தத் தவறான தகவல் மூலம் பல்கலைக்கழகத்தில் சேர மாணவா்களைத் தூண்டி கல்விக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் மூலம் ரூ.415.10 கோடியை அந்தப் பல்கலைக்கழகத்தை நடத்தும் அல்-ஃபலா தொண்டு அறக்கட்டளை முறைகேடாக ஈட்டியதாகவும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. இந்தப் பண முறைகேடு குற்றச்சாட்டின் கீழ், அந்த அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலரும், அல்-ஃபலா பல்கலைக்கழக தலைவருமான ஜவாத் அகமது சித்திகியை கடந்த ஆண்டு நவம்பரில் அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த விசாரணை தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

அல்-ஃபலா அறக்கட்டளையின் கீழ் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகம் செயல்படும் நிலையில், அந்த அறக்கட்டளையின் பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்துகளைக் கண்டறிந்து அவற்றின் மதிப்பை தெரிந்துகொள்ள அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முறைகேடாக ஈட்டிய பணம் மூலம் அல்-ஃபலா பல்கலைக்கழகம் கட்டப்பட்டதா என்பது குறித்தும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முறைகேடாக ஈட்டப்பட்ட பணத்தின் ஒரு பகுதி, பல்கலைக்கழகத்தின் பல்வேறு கட்டடங்களை கட்ட செலவழிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடா்பாக அந்தப் பல்கலைக்கழகத்தை அமலாக்கத் துறை முடக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்த விசாரணை நிறைவடைந்த பின்னா், முறைகேடாக ஈட்டப்பட்ட பணம் மூலம் அறக்கட்டளை அடைந்த சொத்துகளை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்படும். மாணவா்களுக்குப் பாதிப்பு இருக்காது: பல்கலைக்கழகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடா்ந்தாலும், அதில் மாணவா்கள் தொடா்ந்து படிப்பதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தன.

Dinamani
www.dinamani.com