ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்ரீகர்கள் பதிவு செய்யப்பட்ட தேதியில் மட்டுமே புனித யாத்திரை பயணம் செய்ய வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள, இயற்கையாக உருவான பனிலிங்கம் கொண்ட அமா்நாத் குகை கோயிலில் ஆண்டுதோறும் உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசிப்பதற்காக பக்தா்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள 48 கி.மீ. தொலைவுகொண்ட பாரம்பரிய நுன்வான்-பஹல்காம் வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள 14 கி.மீ. தொலைவுகொண்ட செங்குத்தான பால்டால் வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும்.
நடப்பாண்டு அமர்நாத் யாத்திரை வெள்ளிக்கிழமை (ஜூலை 3) தொடங்கியது. இதற்காக பால்டால் மற்றும் நுன்வான்-பஹல்காம் ஆகிய இரு வழித்தட முகாம்களிலிருந்து யாத்ரீகர்களின் முதல் குழுவினர் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
ஆகஸ்ட் 28 வரை 57 நாள்களுக்கு யாத்திரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, இரு வழித்தடங்களிலும் காவல் துறை, மத்திய ஆயுதக் காவல் படை , மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் பிற துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட தேதியில் மட்டுமே பயணம்
இந்த நிலையில், அமர்நாத் யாத்ரீகர்கள் பதிவு செய்யப்பட்ட தேதியில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:
புனித குகைக் கோயிலுக்கான அமர்நாத் யாத்திரையை, பதிவு செய்யப்பட்ட தேதிக்கு முன்னதாக மேற்கொள்ள எந்தவொரு யாத்ரீகரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், யாத்ரீகர்கள் தங்கள் முறைக்காகக் காத்திருந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் மட்டுமே பயணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, யாத்திரைப் பாதையில் நாள்தோறும் அனுமதிக்கப்படும் யாத்ரீகர்களின் அதிகபட்ச எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் வெளியிட்ட அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"யாத்ரீகர்களின் பாதுகாப்பு மற்றும் யாத்திரை சீராக நடைபெறுவதை உறுதி செய்ய, நாள்தோறும் இந்த உச்ச வரம்பைக் கடைப்பிடிப்பது கட்டாயமாகும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The administration in Jammu and Kashmir on Friday said no pilgrim would be permitted to undertake the Amarnath Yatra to the holy cave shrine before the registered date, and appealed people to wait for....
Summary
அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது: முதல் குழுவினர் முகாம்களிலிருந்து புறப்பட்டனர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










