மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி ரேபரேலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றவுள்ளார்.
லக்னௌ விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்தியை, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ரா மற்றும் பிற தலைவர்கள் அவரை வரவேற்றனர். அவரை வரவேற்க ஏராளமான கட்சித் தொண்டர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். அங்கிருந்து, ராகுல் காந்தி ரேபரேலிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
ரேபரேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பங்கஜ் திவாரி கூறுகையில்,
இரண்டு நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதிக்கு வந்துள்ள ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தனது பயணத்தின் முதல் நாளில், பச்ராவனில் உள்ள தாகுரைன் கேடா பகுதியில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை ராகுல் காந்தி திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, கீரான் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். இதையடுத்து, லால் கஞ்ச் பகுதியில் நடைபெறும் மகிளா சம்வாத் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார்.
மே 20ல் ஜனதா தர்ஷன் நிகழ்ச்சியின்போது, ராகுல் காந்தி பொதுமக்களைச் சந்தித்துப் பேச உள்ளார். இதனைத் தொடர்ந்து, 'வீர பாசி' என்பவரின் சிலையைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலும், லோத்வாரி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்பார். அதன் பிறகு அவர் அமேதிக்குப் புறப்பட்டுச் செல்வார்.
அமேதியில் உள்ள மாவட்டக் கட்சித் தலைமையகத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துவார்.
இந்தச் சந்திப்பு 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூக ரீதியான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகவும், கட்சி அமைப்பை மறுஆய்வு செய்யும் நடவடிக்கையாகவும் அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Summary
Leader of the Opposition in the Lok Sabha and Congress MP from Raebareli Rahul Gandhi will address a public meeting in Raebareli on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










