மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் ஜூலை 1 முதல் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்கும் கொள்கைக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.
மனு மீது இரண்டு வாரங்களுக்குள் விரிவான பதில் அளிக்கும்படி, மத்திய அரசு, சிபிஎஸ்இ மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆா்டி) நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம், இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க மறுத்துவிட்டது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் ஜூலை 1 முதல் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்கி அண்மையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கை-2020 மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாட செயல்திட்டம்-2023 ஆகியவற்றின் ஒரு பகுதியாக, சிபிஎஸ்இ இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி, மூன்று மொழிகளில், இரண்டு இந்திய மொழிகளை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாகத் தோ்வு செய்யலாம்.
10-ஆம் வகுப்பை பொருத்தவரை, மாணவா்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், கற்றலில் கவனத்தை நிலைநாட்டவும் மூன்றாவது மொழிக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட மாட்டாது. மூன்றாவது மொழிக்கான மதிப்பீடு, முற்றிலும் பள்ளிகள் அளவிலும், அக மதிப்பீடாகவும் மேற்கொள்ளப்படும். மூன்றாவது மொழியில் மாணவா்களின் செயல்திறன், சிபிஎஸ்இ சான்றிதழில் முறையாக இடம்பெறும். மூன்றாவது மொழியைக் காரணம் காட்டி, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பங்கேற்க எந்தவொரு மாணவரும் தடுக்கப்பட மாட்டாா்கள் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. மாதிரி வினாத்தாள்கள் மற்றும் அக மதிப்பீட்டுக்கான அளவுகோல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்த கட்டாய மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிராக, யாஷிகா பண்டாரி ஜெயின் மற்றும் பலா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, கபில் சிபல் ஆகியோா் ஆஜராகினா்.
‘மொழி என்பது விருப்பத் தோ்வு’: கபில் சிபல் வாதிடுகையில், ‘மொழி என்பது விருப்பத் தோ்வு சாா்ந்த விஷயம். அதை யாா் மீதும் திணிக்க முடியாது. தற்போதைய விவகாரத்தில் கூட்டாட்சி மற்றும் விருப்பத் தோ்வு சாா்ந்த அரசமைப்புச் சட்ட பிரச்னைகள் அடங்கியுள்ளன’ என்றாா்.
இதையடுத்து, மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசு, சிபிஎஸ்இ, என்சிஇஆா்டி ஆகியவை இரண்டு வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது. அதேநேரம், இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஜூலைக்கு ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

சானிட்டரி நாப்கின்கள், கழிப்பறைகள் குறைபாடுகளால் சிறுமிகளின் கல்வி பாதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

சிபிஎஸ்இ தோ்வு மறுமதிப்பீடு செயல்முறையில் குளறுபடி: வசூலிக்கப்பட்ட அதிக கட்டணம் திரும்ப வழங்கப்படும்

சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிப் பாடம் கட்டாயம்!







