அத்தியாயம் 11 - டாப் நல்லது

நேர்முகத் தேர்வை அணுக இதுபோன்ற குணங்களெல்லாம் தேவை என்று சொல்லிக்கொண்டே செல்கிறோம்.

நே
ர்முகத் தேர்வை அணுக இதுபோன்ற குணங்களெல்லாம் தேவை என்று சொல்லிக்கொண்டே செல்கிறோம். அதில், தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர், பிரச்னைகளைத் தீர்க்கக்கூடியவராக இருக்க வேண்டும் என்று நிறுவனங்கள் எதிர்பார்ப்பதற்கு, பல்வேறு தேவைகளும் நடைமுறைகளும் காரணமாக இருக்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளும், உயர் அதிகாரிகளும் அந்நிறுவனத்தின் ஒவ்வொரு கிளைக்கும் தினசரி வந்து சென்றுகொண்டிருக்க முடியாது. அதே நேரத்தில், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளும் தவறின்றி நடைபெற வேண்டும் என்று நினைப்பார்கள். அதனைக் கையாள முதலில் ஒரு ஒழுங்குமுறையை உருவாக்கி வைத்திருப்பார்கள். பிறகு, அந்த ஒழுங்குமுறையைப் பின்பற்ற சரியான ஆள்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இங்குதான் தினசரிச் செயல்பாடுகளில் பிரச்னை வரும். அதனைத் தீர்க்கும் மனோபாவம் உள்ளவர்கள்தான், அந்த நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகளை முறையாகக் கொண்டுசெல்ல முடியும். அதனால்தான் பிரச்னைகளைத் தீர்ப்பவர்களை எதிர்பார்க்கிறார்கள். இதன்மூலம் நிறுவனத்துக்கு ஒரு பிரச்னை தீர்கிறது என்பது மட்டுமல்ல, அந்த நபரை அந்த நிறுவனம் சொத்தாகப் பார்க்கத் துவங்கிவிடும் என்பதுதான் நிதர்சனம்.

சென்ற வாரம், இயல்பான இரண்டு பிரச்னைகளைச் சொல்லி, அதற்குத் தீர்வு சொல்லச் சொல்லியிருந்தோம். அதற்கு நேரம், உழைப்பு, பணம் மூன்றும் செலவழியாத ஒரு தீர்வாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி! அதன்படி யோசித்தால், என்ன தீர்வு வரும் என்று பார்க்கலாம்.

அது ஒரு குறுகலான மலைப்பாதை. இருபுறமும் பாறைகள். ஒருநாள், ஒரு பெரிய பாறை உருண்டு அந்தப் பாதையில் விழுந்துவிட்டது. நீங்கள் அதனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர் செய்ய வேண்டும். கிரேன் போன்றவற்றைக் கொண்டுவர இயலாது. வெடி வைத்துத் தகர்க்க முடியாது. நேரமும் குறைவுதான். என்ன செய்வீர்கள்?

இதுதான் முதல் கேள்வி! இதற்கான தீர்வு, அதே சாலையில், அந்தப் பாறைக்கு அருகில் அதன் அளவுக்கு ஒரு பள்ளம் தோண்டி, அந்தப் பள்ளத்தில் பாறையைத் தள்ளிவிட்டுவிடலாம். அதன் மேல் இந்தப் பள்ளத்தின் மண்ணைப் போட்டுவிட்டால், சாலை தயார்! இதற்கு, கல்லை வெடி வைத்துத் தகர்க்க வேண்டும். பாறை மேல் அப்படியே சாலை போட வேண்டும். கிரேன் மூலம் பாறையைத் தூக்க வேண்டும் என்ற தீர்வுகளைத்தான் யோசிப்போம். ஆனால், இந்தத் தீர்வில், நேரம், உழைப்பு, பணம் ஆகியவை மிச்சமாவதைக் காணலாம்.

அடுத்ததாக,

ஒருநாளில் 35,000 சோப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளிவரும் சோப்புப் பெட்டிகளில், பரவலாக, பல சோப்புப் பெட்டிகளுக்குள் சோப்பு இல்லாமல், கவர் மட்டும் வருவதாகப் புகார் எழுகிறது. அந்தத் தொழிற்சாலையில் சோதிக்கும்போது, சோப்புகளை கவர்களுக்குள் போட்டு சீல் செய்யும் இடத்தில், அந்தக் கவருக்குள் சோப்பு இருக்கிறதா என்பதை ஆராயும் வழிமுறை இல்லை என்று தெரியவருகிறது. அதாவது, அங்கிருந்து செல்லும் எல்லா சோப்புப் பெட்டிகளிலும் சோப்பு இருக்க வேண்டும். வெற்றுக்கவராக ஒரு பெட்டிகூடச் செல்லக்கூடாது. இதற்கு நீங்கள் எப்படித் தீர்வளிப்பீர்கள்?

இதற்கான தீர்வு, மிகவும் எளிமையானது. சோப்புகளை அதற்கான உறைக்குள் அடைத்தபின் வெளிவரும் கன்வேயர் பெல்ட்டை நோக்கி ஒரு பெரிய காற்றாடியை (FAN) வைத்துவிட்டால் போதும். சோப்பு இல்லாத உறைகள் எல்லாம் பறந்துவிடும். ஆனால், பொதுவாக நாம், சோப்புகளை எடை போட வேண்டும். ஒரு டிஜிட்டல் லேசர் இயந்திரம் வைக்க வேண்டும். ஒரு எக்ஸ்ரே இயந்திரம் வைக்க வேண்டும். ஒவ்வொரு சோப்பையும் யாராவது தூக்கிப் பார்க்க வேண்டும் என்று பல்வேறு தீர்வுகளை முன்வைப்போம். இவை எல்லாவற்றையும்விட, எது நேரம், உழைப்பு, பணத்தைச் சேமிக்கிறது என்பதுதான் முக்கியம்.

ஆக, பிரச்னையைத் தீர்க்கவும், கற்பனை சக்தியும், கவனமும்தான் கைகொடுக்கும் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

நமக்கு வேலையில் மட்டுமா பிரச்னை வருகிறது? சொந்த வாழ்விலும் வருகிறது. அவற்றைத் தீர்க்க முடியாமலோ அல்லது இன்னும் சிக்கலாக்கிக்கொண்டோதான் நாம் வாழ்ந்து வருகிறோம். ஒரு சிலருக்கு மட்டும் பிறவியிலேயே சிக்கலைத் தீர்க்கும் வகையில் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்கும் அல்லது தீர்வுகாணும் இயல்பு இருக்கும். ஆனால், அவர்களைத் தவிர மற்றவர்களும், அதேபோன்று தீர்வு காணலாம் என்பதை உணர வேண்டும். ஒரு வேலைக்குப் போவதற்கு மட்டுமல்ல! மொத்த வாழ்க்கைக்குமே, சிக்கலைத் தீர்க்கும் மனநிலை உதவும். இதனை நாம் வளர்த்துக்கொள்ளலாம்.

இதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது.

அது என்னவென்றால்,

ஒரு பிரச்னை ஏற்படுகிறது என்றால், நாம் என்ன செய்கிறோம்? என்னடா இப்படி ஆகிவிட்டதே?

கொஞ்சம் முன்னர் சிந்தித்திருக்கலாமோ?
யாரும் ஒன்றும் சொல்லிவிட மாட்டார்களே?
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?
என்று பல்வேறு சிந்தனைகள் ஓடி, தீர்வு காணும் மனநிலை மறைந்து, கவலை தலையெடுத்துவிடும். அதுதான், நமது பலத்தை பலவீனமாக்கும் இடம். இந்த இடத்தில்தான் நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும்.

அதுதான் TOP.
இதன் விரிவாக்கம் Think On Paper!
அதை எப்படிச் செய்வது?

நமது பிரச்னையை, நிறுவனத்தின் பிரச்னையை – காகிதத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதைத்தான் மிகப்பெரிய வெற்றியாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

காகிதத்தில் சிந்திப்பது என்றால்? நாம் ஒரு பிரச்னை ஏற்பட்ட பிறகு எப்படிச் சிந்திக்க வேண்டும் என்று முறைப்படுத்துவது. மேலும், அப்படிச் சிந்திப்பதை உடனடியாகக் காகிதத்தில் பதிவுசெய்வது. இதுதான் மிகவும் மேம்படுத்தப்பட்ட வழிமுறையாகப் பார்க்கப்படுகிறது.

அதன்படி, ஒரு பிரச்னையைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கும்போதே, பேனாவுடன் ஒரு காகிதத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு…?

ஒரு வாரம் காத்திருங்கள். தீர்வுடன் சந்திப்போம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com