‘வெடித்து வீழ் படித்தைவாங்கி மெல்லிய சீலை கட்டிக்
கடுக்கெனப் பிழிந்துகொண்டு கண்டதற்கிணங்கக் கூட்டிக்
குடித்திட வெப்புமாறுங் குளிந்திடு மங்கமெல்லாம்
வடித்தநன் மொழியினாளே மாதுளம் பழத்தின் சாறே’
என்னும் பழம் பாடல் மாதுளம் பழத்தின் சாற்றை அருந்தினால் சரீரம் முழுவதும் குளிர்ச்சி அடையும் என்கின்றது. இந்த மாதுளை இந்தியாவில் உற்பத்தியாகும் வணிகரீதியான பழப்பயிர்களில் ஒன்றாகும். இதன் தாயகம் பெர்ஷியா. தற்போதைய ஈரான். மாதுளை ஒரு வறட்சி தாங்கக் கூடிய பயிர் எனச் சொல்லப்பட்டாலும் வணிகரீதியான உற்பத்திக்கு தண்ணீர் பாசனம் மிகவும் அவசியம். மாதுளைக்கு தண்ணீர் எவ்வளவு தேவைப்படும் என்பது செடியின் வயது, வளர்ச்சி, மரத்தின் அளவு, தட்ப வெப்ப நிலை, மண்ணின் தன்மை, நீராவியாகும் அளவு என பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன.
மாதுளை எல்லா வகை மண்ணிலும் விளையும். வறட்சியான கார மற்றும் அமிலத்தன்மை கொண்ட நிலங்களிலும் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரமுள்ள மலைப்பகுதிகளிலும் மாதுளை விளையும். உயிர் விளைச்சல் தரக்கூடிய சிறந்த வகை மாதுளை ரகங்களை பனிக்காலத்தில் குளிர் அதிகமாகவும், கோடைக் காலத்தில் உஷ்ணம் மிகுந்துள்ள பகுதிகளில் மட்டுமே வளர்க்க முடியும்.
ஈரானை தாயகமாக கொண்ட மாதுளை வட இந்தியாவிற்கு வந்தது. இப்போது மாதுளை மத்திய கிழக்கு நாடுகளிலும், தெற்காசிய நாடுகளிலும், பூமத்திய ரேகையை ஒட்டிய நாடுகளிலும் கலிஃபோர்னியா, அரிசோனா ஆகிய அமெரிக்க மாநிலங்களிலும் விளைகின்றது. ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகர் மலைப் பகுதிகளில் விளையும் மாதுளை தரத்தில் மிகவும் உயர்ந்தது. தென் சீனத்திலும், தென் கிழக்கு ஆசியாவிலும் பெருமளவில் மாதுளை வளர்க்கப்படுகின்றது. ஒரு பழத்தில் பல விதைகள் இருந்தால் அவை ஆங்கிலத்தில் Berry பெர்ரி என அழைக்கப்படும். மாதுளை பெர்ரி வகைப் பழமாகும். சிவந்த நிறம், சில வகைகளில் கருஞ்சிவப்பு, பர்பிள் நிறம் கொண்ட மாதுளை முத்துக்கள் அடுக்கடுக்காக காணப்படும். மாதுளை பழத்தில் 200 முதல் 1400 வரை விதைகள் இருக்கும்.
மாதுளை விதையைச் சுற்றி தண்ணீர் கோர்த்து உள்ள பகுதிதான் நாம் விரும்பி உண்ணக் கூடிய பகுதி. இதை தாண்டி விதை இருக்கும். விதைகள் சுவையற்றது. ஆதலால் மாதுளம் பழத்தின் உண்மையில் விதை இடைஞ்சலூட்டும். விவசாய விஞ்ஞானிகளின் தொடர் ஆராய்ச்சியின் பயனாக ‘விதையில்லா மாதுளை’ ரகங்கள் கண்டறியப்பட்டு வியாபார ரீதியில் உழவர்களுக்கு நல்ல மகசூலையும், வருவாயையும் கொடுக்கின்றது. இவ்வகை soft seeded எனப்படும் மெல்லிய விதைகளை கொண்டிருக்கும். மெல்லிய விதைகள் இருந்த போதிலும் இவை விதையில்லா மாதுளை என்றே அழைக்கப்படுகின்றது.
Punica Grantum எனும் தாவரயியல் பெயர் கொண்ட மாதுளைக்கு தமிழில் இந்த பெயர் வந்தது என்பதற்கு சுவையானதொரு காரணம் சொல்கின்றனர். மாது + உளம் – பெண்ணின் உள்ளத்தில் உள்ள ரகசியத்தினை அத்தனை எளிதில் கண்டறிய இயலாதது போல மாதுளம் பழத்தின் தோலை உரிக்காமல் உள்ளிருக்கும் மாதுளை முத்துக்களை கண்டறிய இயலாது. ஆகவே தான் இக்கனிக்கு மாதுளங்கனி எனப் பெயர் வந்தது என்பர்.
100 கிராம் மாதுளையில் என்னென்ன சத்துக்கள் உள்ளன தெரியுமா?
சக்தி - 83 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 18.7 கிராம்
சர்க்கரை - 13.67 கிராம்
நார்சத்து - 4 கிராம்
கொழுப்பு - 1.17 கிராம்
புரதம் - 1.67 கிராம்
வைட்டமின்கள்
B1 - 6%
B2 - 4%
B3 - 2%
B5 - 8%
B6 - 6%
C - 12%
E - 4%
K - 16%
நுண் உப்புகள்
சுண்ணாம்பு - 1%
இரும்பு - 2%
மக்னீசியம் - 3%
மங்கனீசு - 6%
பாஸ்பரஸ் - 5%
பொட்டாசியம் - 5%
சோடியம் - 0.1%
துத்த நாகம் - 4%
மாதுளை பொதுவாக வறட்சியை விரும்பும் பயிர். பழம் உண்டாகின்ற சமயம் நீண்ட வெப்பமும், வறண்ட சூழ்நிலையும் தேவை. 38o C வெப்ப நிலை என்பது மாதுளம் பழம் உண்டாவதற்கு உகந்த வெப்ப நிலையாகும் பழம் பழுக்கும் போதும் வறண்ட, வெப்பமான சூழ்நிலை தேவைப்படுகின்றது. அதிக பனி பொழிவு, அதிக மழை பொழிவு உள்ள இடங்களிலும், உறை பனி பொழிவு உள்ள பகுதிகளிலும் மாதுளை விளைச்சல் கொடுக்காது. நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் நிலங்களிலும், சரிவான நிலங்களிலும் மாதுளை நன்கு வளர்ந்து மகசூல் கொடுக்கும்.
மாதுளை ஒரு லாபகரமான, எளிய பழப்பயிர் என்பதனால் தொடர் ஆய்வின் காரணமாக சமீப ஆண்டுகளில் பல ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கணேஷ் எனப்படும் மாதுளை ஆலன்டி எனும் ரகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இனமாகும். மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் புனே பகுதியில் வெகுவாக விளையும் இந்த ரகம் விதையில்லா மாதுளை ரகம். இதன் வண்ணம், சுவை, அபரிதமான காய்ப்பு திறனுக்காக விவசாயிகளால் விரும்பி சாகுபடி செய்யப்படுகின்றது. குஜராத்தில் டோல்க்கா, ஜோத்பூர், பெட்கூனா, வட்கி, காந்தாரி, காபூல், மஸ்கட் சிவப்பு, ஸ்பானிஷ் ரூபி, G137, P23, P26 மிருதுளா, அரக்டா, ஜோதி, ரூபி, ஏற்காடு 1, கோ 1, ருத்ரா போன்றவைகளும் பல்வேறு மாதுளை ரகங்களாகும்.
மாதுளை விதையில்லா இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்யப்படுகின்றது. 20-30 செமி நீளமுள்ள, 6-12 மி.மீ கனமுள்ள மாதுளை குச்சிகளை மழைக்காலத்தில் வெட்டி எடுத்து அதனை வேர் வந்த குச்சிகளாக்க வேண்டும். அல்லது 12-18 மாத பதியன்கள் மூலமும் பயிர் செய்யலாம்.
நடவு செய்யும் முன்னர் நிலத்தை களை, புல் பூண்டுகளின்றி நன்கு உழவு செய்து பண்படுத்த வேண்டும். 10 முதல் 15 அடி இடைவெளியில் மண்ணின் வளம், தன்மை ஆகியவற்றை அனுசரித்து இடைவெளிவிட்டு 2 அடி X 2 அடி X 2 அடி அளவில் குழிகள் எடுக்க வேண்டும். குழி எடுத்து நன்கு ஆறவிட்டு அந்த குழிகளில் தொழு உரம், மேல் மண் கலந்து நிரப்பி அடையாளம் செய்ய வேண்டும். மாதுளைக்கு நீர் பாசனம் செய்ய சொட்டு நீர் அமைப்பே உகந்தது என்பதால் மாதுளை நடவு செய்யும் முன்னரே சொட்டு நீர் அமைத்தல் அவசியம்.
விண் பதியன் மூலம் மாதுளை நாற்றுகளை நவம்பர், டிசம்பரில் உருவாக்குவர். ஆகவே மாதுளை நாற்றுகளை பிப்ரவரி, மார்ச் மாதம் அல்லது ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்வது ஏற்ற பருவம். நாற்று நடவு செய்யும் முன் குழியில் 1 கிலோ சூப்பர் பாஸ்பேட் கலந்தால் நாற்றுகளின் வேர் வளர்ச்சி அதிகரித்து செடியின் வளர்ச்சி விரைவாகும்.
மாதுளைக்கு பரிந்துரைக்கப்படுகின்ற உர அளவு தழைச்சத்து 600 – 700 கிராம், மணிச்சத்து 200 – 250 கிராம், சாம்பல் சத்து 200 – 250 கிராம். ஒரு வளர்ந்த மரத்திற்கு ஒரு ஆண்டிற்கு கொடுக்க வேண்டும். வளரும் மரத்திற்கு உர அளவை குறைத்தும், வளர்ந்து மகசூல் கொடுக்கும் மரங்களுக்கு கூடுதலாகவும் உரம் கொடுக்கப்பட வேண்டும். மரம் ஒன்றிற்கு 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 3.5 கிலோ புண்ணாக்கு, 1 கிலோ அமோனியம் சல்பேட் பூக்கும் முன்னர் கொடுத்தால் பழ வளர்ச்சி சீராக இருக்கும். உரத்தை மூன்றாக பிரித்து டிசம்பர், ஜனவரி, மே, ஜூன், அக்டோபர் நவம்பர் மாதங்களில் இட வேண்டும்.
மாதுளை செடியை 4 வது ஆண்டிலிருந்து காய்ப்பிற்கு விடலாம். அதற்கு முன்னர் தோன்றும் பூக்களை கிள்ளி அப்புறப்படுத்தினால் செடியின் வளர்ச்சி நன்கு இருக்கும்.
மாதுளையில் சீதோஷ்ண நிலையைப் பொறுத்து சிறிய பிஞ்சுகளிலும், நன்கு முதிர்ந்த பழங்களிலும், பூ முனைப் பகுதியிலும் வெடிப்புகள் ஏற்படும். இவ்வாறு வெடிப்புகள் ஏற்பட்ட பின்பு பூச்சிகளும், நோய்களும் அப்பகுதியை தாக்கி சேதம் விளைவிக்கும். பழவெடிப்பை தவிர்க்க ஜூன் மாதத்தில் ஒரு சதவிகித அளவில் திரவ மெழுகு கரைசலை (1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்தால் ஒரு சதவிகித கரைசல் கிடைக்கும்.) 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிப்பதால் நல்ல பலனைத் தரும்.
மாதுளை பழங்களை சேதப்படுத்தும் புழுவின் தாய் பட்டாம்பூச்சி. பூவிலும், சிறிய பழங்களின் நுனி பகுதியிலும் முட்டைகளை இடுகின்றன. முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் பூக்களையும், பழங்களையும் சாப்பிட்டு உட்சென்று மாதுளை விதைகளையும் சேதப்படுத்தும். சிறிய காய்களில் உள்ள பூ முனைப் பகுதியை நீக்கிவிடுவதால் அந்த இடத்தில் தாய் அந்துப்பூச்சி முட்டை இடாதவாறு செய்யலாம். அல்லது சிறிய காய்களையும், பழங்களையும் பாலித்தீன் பை அல்லது சிறிய துணிப்பைகளால் மறைத்து கட்ட வேண்டும். வேப்ப எண்ணெய் 3 சதவிகித அடர்த்தி கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தாய் பட்டாம்பூச்சிகள் தென்படும் போது தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள் விட வேண்டும். ரசாயன முறையில் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் 1.5 மில்லி டைமித்தோயட் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
மாதுளை சாகுபடியில் பழ வெடிப்பு மிகவும் பிரச்னைக்கு உரிய விஷயம். இளம் செடிகளில் போரான் பற்றாக்குறை இருந்தால் பழ வெடிப்புகள் தோன்றலாம். ஆனால் வளர்ந்த மரங்களில் பழவெடிப்புகள் காணப்பட்டால் அதற்கு மண்ணில் ஈரப்பதமும், காற்றில் ஈரப்பதமும் திடீரென மாறுவதுதான் காரணமாகும். நீண்ட வறட்சி காணப்படும் போது மாதுளை பழத்தின் தோல் தடிமனாகிவிடுகின்றது. திடீரென தண்ணீர் பாய்ச்சினால் மாதுளை விதை முத்துக்களில் தண்ணீரின் அளவு உடனே அதிகரிப்பதால் பழம் சட்டென அளவில் பெருக்கின்றது. இதனாலும் பழவெடிப்பு ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க மண்ணின் ஈரப்பதத்தில் திடீரென பெரிய மாற்றங்கள் இல்லாமல் பாசன முறையை ஒழுங்குப்படுத்தப் பட வேண்டும். பழ வெடிப்புகள் ஏற்படாத ரகங்களை தேர்வு செய்து நடவேண்டும். கால்ஷியம் ஹைட்ராக்ஸைடு தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
மாதுளைக்கு கோடை காலத்தில் வாரம் ஒரு முறையும், மழைக் காலங்களில் இரு வாரத்திற்கு ஒரு முறையும் பாசனம் செய்யலாம். சொட்டு நீர் பாசனமென்றால் மாதுளைக்கு ஆண்டிற்கு 20 செமீ அளவிற்கு தண்ணீர் தேவைப்படும். மாதுளை செடிகளை கவாத்து செய்து வளர்ப்பது அவசியம். ஒற்றை தண்டு மரமாக (Single stem) அல்லது பல தண்டு மரமாக (multi-stem) வளர்க்கலாம். தண்ணீர் குச்சிகள் (suckers) குறுக்கு நெடுக்கு கிளைகள், காய்ந்த, நோய் தாக்கிய கிளை, குச்சிகள் போன்றவைகளை கூர்மையான கவாத்துக்கத்து அல்லது சிக்கேச்சர் மூலம் வெட்டி செடி காற்றோட்டமாகவும், காய் பறிப்பிற்கு ஏற்றதாகவும் கவாத்து செய்து வளர்க்க வேண்டும்.
மாதுளை சாதாரணமாக பிப்ரவரி-மார்ச் மாதத்தில் பூவிட்டு ஜூலை ஆகஸ்டு மாதங்களில் பழங்கள் அறுவடைக்கு வரும். எனவே டிசம்பர் மாதத்தில் கவாத்து செய்ய வேண்டும்.
மாதுளை பூ 5 முதல் 6 மாத காலத்தில் அறுவடைக்கு ஏற்ற பழமாக மாறுகின்றது. அவை வெளிப்புற தோலின் நிறமாற்றத்தை வைத்து விளைந்த, பழுத்த பழங்களை அனுமானித்து பறிக்கப்படுகின்றது. செடிகள் நட்ட நான்காம் ஆண்டு முதல் பலன் கொடுக்கத் துவங்கும் என்றாலும் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் முழு அளவிலான பலனைக் கொடுக்கும். வளர்ந்த மாதுளை மரமொன்றில் இருந்து ஆண்டிற்கு 100 முதல் 150 பழம் மகசூலாக கிடைக்கும். அடர் நடவு முறையில் ஏக்கருக்கு 400 செடிகள் நடவு செய்து கணேஷ் ரகத்தில் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 50 பழங்கள் மகசூல் எடுக்கலாம்.
அறுவடை செய்த மாதுளம் பழங்களை ஒரு வார காலத்திற்கு நிழலில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு வைத்திருக்கும் போது பழத்தின் தோல் கடினமாக பேக்கிங் செய்து வெளியூர்களுக்கு வண்டிகளில் அனுப்பும்போது பழம் உடைந்து சேதமாவதில்லை. இதுபோன்ற அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பம் (Post Harvest technology) பழச்சாகுபடியாளர்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மாதுளம் பழத்தை அதன் எடையை பொருத்து மூன்று தரமாக பிரிக்க வேண்டும்.
A தரம் - 350 கிராமிற்கு மேல்
B தரம் - 200 – 350 கிராம்
C தரம் - 200 கிராமிற்கு கீழ்
பழத்தை அதன் எடையை கணக்கிட்டு பிரிப்பதுடன் அதன் புற தோற்றம், நிறம், அமைப்பு போன்றவற்றின் அடிப்படையிலும் பிரித்தால் நல்ல சந்தை விலை கிடைக்கும்.சில பகுதிகளில் சூப்பர், கிங், குயின், பின்ஸ் எனவும் பழத்தின் ரகங்களை பிரிக்கின்றனர்.
பறித்த மாதுளம் பழத்தை குளிர் கிட்டங்கியில் (cold storage) 10 வாரக் காலத்துக்குச் சேமித்து வைத்தும் நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்யலாம். சின்ன கிராமத்திலிருக்கின்ற வியாபாரிகளால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன மாதுளை நகர பழ மண்டிக்கு வந்தடைந்து பெரு நகர வர்த்தகர்களால் கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றது.
சிரிக்கும் சிவந்த முத்துக்கலை உடைய மாதுளை வறட்சியிலும் வளம் தரும் மகத்தான பயிர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.