அஞ்சலி தேவி: 4. நடிகர் திலகத்தின் பாஸ் !

1960களில் இந்திய சினிமாவின் இமாலயப் படைப்பாளிகளில் ஒருவர் ஸ்ரீதர். அவரது ஒவ்வொரு நகர்வும் தலைப்புச் செய்தியாயிற்று. தமிழ், தெலுங்கு, இந்தி மூன்றிலும் அவர் பிஸி!

1960களில் இந்திய சினிமாவின் இமாலயப் படைப்பாளிகளில் ஒருவர் ஸ்ரீதர். அவரது ஒவ்வொரு நகர்வும் தலைப்புச் செய்தியாயிற்று. தமிழ், தெலுங்கு, இந்தி மூன்றிலும் அவர் பிஸி!

ஏராளமான வேலைகளுக்கு நடுவே அஞ்சலி ஒப்படைத்தப் பணியைச் செய்து முடிக்கத் தாமதமாகியது.

ஸ்ரீதர் வசனம் எழுதி முடித்து விட்டாரா...? என்று அஞ்சலி பிக்சர்ஸ் நிர்வாகிகள் அவ்வப்போது விசாரித்தனர்.

அஞ்சலிக்கு இருப்பு கொள்ளவில்லை.

ஸ்ரீதர் இனி புதிதாகச் சிந்தித்து உரையாடல் எழுத வேண்டாம். தெலுங்கு டயலாகை தமிழில் மொழி பெயர்த்தாலே போதும்’. என்று தன் ஊழியரிடம் கூறி அனுப்பினார்.

'ரத்த பாசம்’ ஸ்ரீதரை அஞ்சலியின் வார்த்தைகள் ரணப்படுத்தின.

ஓர் உண்மையான படைப்பாளி, இன்னொரு எழுத்தாளரின் சொற்களை அப்பட்டமாக 'காப்பி’ அடிப்பது அவமானம் என உணர்ந்தார்.

ஓர் இக்கட்டான சூழலில் அஞ்சலி கொடுத்திருந்த அட்வான்ஸ் ஆயிரம் ரூபாயையும், கதை வசன ஃபைலையும் கொடுத்து அனுப்பினார்.

ஸ்ரீதரும் தன்னைப் போன்ற பட முதலாளி. திரைத் தொழிலின் அவஸ்தைகளை நன்கு உணர்ந்தவர் - கால விரயம் செய்ததோடு மட்டுமல்லாமல், காசோலையையும் திருப்பித் தந்து அவமதித்ததில் அஞ்சலிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

ஸ்ரீதர் இல்லாமலேயே 'அடுத்த வீட்டுப் பெண்’ சினிமாவை சிறப்பாகத் தன்னால் வழங்க முடியும் என்று நிருபித்தார்.

ஒரு முழு நீள நகைச்சுவைச் சித்திரத்தில் அஞ்சலியை நாயகியாக ஜனங்கள் எதிர்பார்க்கவில்லை. கவர்ச்சி, கண்ணீருடன் ஹாஸ்யமும் தனக்கு அத்துபடி என்று அஞ்சலி அதிரடியாக ஜெயித்துக் காட்டினார்.

ஆனந்த விகடனில் வெளியான 'அடுத்த வீட்டுப் பெண்’ சினிமா விமர்சனம், அதன் ஆரவாரமான வெற்றிக்கு அஸ்திவாரம் அமைத்தது.

முனுசாமி : -- படம் எப்படி தம்பி?

மாணிக்கம்---- --: நல்லா இருக்குது அண்ணே.

முனுசாமி - : ஹீரோயின் அஞ்சலி தானே. அஞ்சலி எப்படி தம்பி?

மாணிக்கம் -: கேட்கணுமா? அப்படியே மனசிலே நிக்குது. ஆட்டமும், பாட்டும் துடிப்பான பேச்சும், ஜப்பான்காரப் பெண்ணாக வந்து கீச்சு மூச்சுன்னு பேசறதும், குலுங்கி மினுக்கி நடக்கறதும்... ரொம்பப் பிரமாதம் அண்ணே!

முனுசாமி -: நீ சொல்றதைப் பார்த்தா...

மாணிக்கம்- கலர் டான்சுக்காகவும், காமெடிக்காகவும் இந்தப் படத்தைக் கட்டாயம் பார்க்கணும் அண்ணே! ’

தனியார் டிவி.களில் முழு நேர ஒளிபரப்பு வருகிற வரையில், வாத்தியார் படங்களுக்கு இணையாகப் பட்டி தொட்டி அனைத்திலும் அடுத்த வீட்டுப் பெண் அபாரமாக ஓடியது!

சித்ராலயா கோபுவின் உத்தரவின்றி உள்ளே வா, கே.பாக்யராஜின் இன்று போய் நாளை வா, சுந்தர் சி.யின் உள்ளத்தை அள்ளித்தா, சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா எல்லாமே அடுத்த வீட்டுப் பெண்ணின் மறு அவதாரங்கள்.

பி.சுசிலாவுக்கு கணவனே கண் கண்ட தெய்வம், எம்.எஸ். ராஜேஸ்வரிக்கு டவுன் பஸ், என்று அஞ்சலியின் உதட்டசைவு புது வாழ்வு பெற்றுத் தந்ததைப் போல்,

பி.பி. ஸ்ரீனிவாஸின் குற்றால குரலுக்குத் தமிழகத்தில் நிரந்தர மேடை அமைத்தது அடுத்த வீட்டுப் பெண்.

'வனிதா மணியே, மலர்க் கொடி நானே - மகிழ்ந்திடுவேனே..., கன்னித் தமிழ் மணம் வீசுதடி... என எல்லாமும் சூப்பர் ஹிட் பாடல்கள்.

பிரபல எழுத்தாளர் 'எல்லார்வி’ எழுதியது 'கலீர் கலீர் ’ தொடர்கதை.

அன்னையின் ஆணை படத்துக்குப் பின்னர் பாரகன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவாஜி - பத்மினி நடிப்பில் சி.ஹெச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் உருவாக இருந்தது.

நடிகர் திலகமும்-பத்மினியும் 1957ல் ஓய்வு ஒழிச்சலின்றி நடித்த நேரம். அவர்களின் கால்ஷீட் கிடைக்கவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற திரை கானங்களில் ஒன்று - 'மாலையிட்ட மங்கை’யில் ஒலித்த 'செந்தமிழ்த் தேன்மொழியாள்! ’ டி.ஆர். மகாலிங்கத்துக்குப் பட உலகில் மறு மலர்ச்சி தந்தது.

இன்றளவும் சூப்பர் சிங்கர் போட்டிகளில் சிறப்பிடம் வகிக்கிறது.

டி.ஆர். மகாலிங்கத்தை நாயகனாக்கி, 'கலீர் கலீர்’ ஆட வந்த தெய்வமாக உருவானது. அதில் நாட்டிய நங்கையாக அஞ்சலி.

'பஹாடி’ என்கிற இந்துஸ்தானி ராகத்தில் டி.ஆர். மகாலிங்கம் - பி. சுசிலாவின் மயக்கும் குரல்களில் டூயட்டாக ஒலிக்கும்

'கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்

கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம்’

அர்த்த ஜாமங்களில் செந்தேனை செவிகளில் சேர்த்து விட்டுப் போகும்.

இப்பாடல் காட்சியில் வில்லன் வீசி எறியும் கண்ணாடித் துண்டுகளுக்கு இடையேயும் அஞ்சலி அற்புதமாக ஆடுவார். கே.வி. மகாதேவன் இசையில் இனிமையான பாடல்கள் நிறைந்த படம் ஆட வந்த தெய்வம்.

இதே பாடல் இன்னொரு முறை பி.சுசிலா - பி. லீலாவின் இணைந்த குரல்களிலும் ஒலிக்கும்.

ஏறக்குறைய முப்பது வயதைக் கடந்த நிலையிலும் அழகும் இளமையும் கொலுவிருக்க, அஞ்சலி ஆடிய ஆட்டம் படத்தின் வெற்றிக்கு விதையூன்றியது.

'சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

அதைச் சொன்னாலும் கேட்பவர்க்குப் புரியவில்லை’

பி. சுசிலாவின் குரலில் ஒலித்த அற்புதப் பண். அஞ்சலியின் உதட்டசைவில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக அமைந்த 'எங்கள் செல்வி’ படப் பாடல் அது.

ஏ.நாகேஸ்வர ராவ்- அஞ்சலி தம்பதியராக நடித்த நல்ல சினிமாக்களில் எங்கள் செல்வியையும் சேர்த்துக் கொண்டார்கள் தமிழர்கள்.

1960ல் தொடர் தோல்விகளால் இலேசாக மங்கியிருந்தது பொன்மனச் செம்மலின் புகழ் வெளிச்சம். தீபாவளி வெளியீடுகளில் மன்னாதி மன்னனுக்கு மக்கள் மகுடம் சூட்டியதால், மீண்டும் புரட்சி நடிகரின் கவுரவம் நிலைத்தது.

கவிஞர் கண்ணதாசனின் 'ஆட்டணத்தி-ஆதிமந்தி’ மன்னாதி மன்னனாகத் திரை வடிவம் பெற்றது.

எம்.ஜி.ஆரால் கவர்ந்து வரப்படும் கரிகாலன் மகள் கற்பகவல்லியாக அஞ்சலியும், புரட்சி நடிகரின் காதல் பைங்கிளி சித்ராவாக நாட்டியப் பேரொளி பத்மினியும் பங்கேற்ற படம்.

அஞ்சலியை விட சித்ராவாக வரும் பத்மினிக்கே நடிக்கச் சந்தர்ப்பம் கூடுதலாக இருந்தது. காரணம் மன்னாதி மன்னன் படத்தைத் தயாரித்த நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸின் ஆஸ்தான நாயகி பத்மினி.

ஆனாலும் டைட்டிலில் அஞ்சலியின் பெயரை முதலில் போட்டுப் பெருமைப்படுத்தினார் பட அதிபரும் டைரக்டருமான நடேசன்.

'என்றும் எம்.ஜி.ஆரின் ராசியான ஜோடி அஞ்சலி! ’ என்பது பரிபூரணமாக நிருபனமானது.

'காவிரித்தாயே காவிரித்தாயே காதலர் விளையாட பூ விரித்தாயே! ’

என்று கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பாடலில் அஞ்சலிக்காக ஒலித்த குரல் கே. ஜமுனாராணி.

பி.சுசிலா, எம்.எஸ். ராஜேஸ்வரி வரிசையில் கே. ஜமுனாராணிக்கும் அஞ்சலிக்கு வாயசைத்ததால் புதுப் புகழ் வாய்த்தது.

ஏராளமான இனிய பாடல்களால் மன்னாதி மன்னனுக்குத் தாய்ப்பால் ஊட்டியவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் -டி.கே. ராமமூர்த்தி.

எம்.ஜி.ஆரின் அதிகப்படியான அழுகைப் பாடல்களுக்கு ஒட்டுமொத்தக் குத்தகைதாரர் டி.எம்.எஸ். ஆனால் மன்னாதி மன்னனில் பி.பி. ஸ்ரீநிவாஸ் -பி.சுசிலா- கே. ஜமுனா ராணி குரல்களில் மயிலிறகின் வருடலாக

'நீயோ... நானோ... யார் நிலவே...

அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே... ’

சூப்பர் ஹிட் சோக கீதம் அமைதியான இரவுப்பொழுதுகளில் ஆயிரம் அர்த்தங்கள் கூறி இனிமை சேர்க்கிறது இன்றும்.

அஞ்சலியின் நடிப்பில் 1961 தீபாவளி ரிலீஸ் பங்காளிகள்.

ஜெமினிகணேசன் - அஞ்சலி தொடர்ந்து ஜோடியாக ரசிகர்களை மகிழ்வித்த சமயம். அவர்கள் இருவரையும் அண்ணன் தங்கையாகப் பாச மழையில் நனைவித்தது பங்காளிகள்.

1962 ஆகஸ்டு 31ல் அஞ்சலி பிக்சர்ஸின் மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் வெளியானது. வழக்கமான ஜெமினி - அஞ்சலி ஜோடியுடன் எம்.ஆர். ராதாவும் நடித்த மாயாஜாலப்படம். பத்திரிகை விமர்சனங்களை மீறி வசூலை வாரித் தந்தது.

‘அருகில் வாராய் எனைப் பாராய்

அபயம் நீயே மகாதேவா

அருகில் வா வா என்னைக் கா வா’

பி. சுசிலாவின் தேன் குரலில் மாறுபட்ட பாடலாக சூப்பர் ஹிட் ஆனது.

1963 . தெலுங்குப் பட உலகின் முதல் வண்ணச் சித்திரம் லவகுசா. அதில் என்.டி. ராமாராவ் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாகவும், அஞ்சலி சீதாப்பிராட்டியாகவும், ஜெமினி கணேசன் லஷ்மணனாகவும் நடித்து ஜனங்களை ஆட்கொண்டார்கள்.

ஆண்டு முழுவதும் ஓடி ஆந்திராவில் பொன்விழா கொண்டாடியது லவகுசா.

'லவகுசா வெளியான நேரம். யாரும் என்னை சொந்தப் பெயர் சொல்லி அழைத்ததில்லை. சீத்தம்மா சீத்தம்மா என்றே அழைப்பார்கள். அந்த அளவு சீதையாகவே என்னை பாவித்தார்கள். பொது இடங்களில் பார்க்கிற பலர் 'சீத்தம்மா ஆசீர்வாதம் பண்ணுங்க’ என்று காலிலேயே விழத் தொடங்கினார்கள். அதற்காகவே நான் பயந்து ஓடி ஒளிந்தது உண்டு. ’ - அஞ்சலிதேவி.

லவகுசா தமிழிலும் வந்து பிரமாதமாக ஓடியது.

கே.வி. மகாதேவனின் இசையில் ஏ. மருதகாசியின் காவிய வரிகளில் ஒலித்த

'ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே

அதை தினமும் தினமும் பாடிடுவோம் கேளுங்கள் இதையே’

பல காண்டங்களை உள்ளடக்கிய ராமாயணத்தைப் பத்து நிமிடங்களில் உலகெங்கும் பக்திப் பறை சாற்றிற்று.

------------

'பராசக்தி’யில் முழுதாக நடித்து முடித்து, படம் திரைக்கு வருமா...? ’ என்கிற அவல நிலை வி.சி. கணேசனுக்கு, ஏவி. மெய்யப்பச் செட்டியாரால் ஏற்பட்டது.

பரிதாபகரமான சூழ்நிலையில் கணேசன் வாய்ப்பு தேடிச் சென்ற இடம் அஞ்சலி பிக்சர்ஸ்.

கணேசனுக்கு மிகத் தைரியமாக இரண்டாவது ஹீரோ வாய்ப்பை வழங்கினார் எல்.வி. பிரசாத். ஏ.நாகேஸ்வர ராவுக்கும் அஞ்சலிதேவிக்கும் மருமகனாக கணேசன் நடித்த படம் பூங்கோதை.

ஒரே நேரத்தில் தமிழிலும், பரதேசி என்ற பெயரில் தெலுங்கிலும் உருவானது. இரண்டிலும் கணேசன் இடம் பெற்றார்.

சிவாஜிகணேசனை ஆந்திராவில் எடுத்த எடுப்பில் அறிமுகப்படுத்திய பெருமை அஞ்சலியைச் சேரும்!

பராசக்தி வெளிவர ஆறு மாதங்களுக்கு முன்னரே ஏப்ரல் 1952 பேசும் படம் இதழில்

'சிவாஜி யார்...? ’ என்றே திரை ரசிகர்களுக்குத் தெரியாத நிலையில், 'பூங்கோதை’ சினிமா விளம்பரத்தில்

அஞ்சலி, ஏ. நாகேஸ்வரராவ், எஸ். வி. ரங்காராவ் பெயர்களுக்கு அடுத்து நாலாவதாக,

'வி.சி. கணேசன்’ என்று நடிகர் திலகத்தின் பெயரையும் சேர்த்துப் பெருந்தன்மையுடன் வெளியிட்டது அஞ்சலி பிக்சர்ஸ்.

ஒரு பட விளம்பரத்தில் சிவாஜி கணேசன் பெயர் இடம் பெற்றது அதுவே முதல் முறை என்று உறுதியாகச் சொல்லலாம்.

சிவாஜி - அஞ்சலி லவ் டூயட் பாடி நடித்த ஒரே படம் 1959ல் வெளியான நான் சொல்லும் ரகசியம்.

கணேசனுக்கு அதில் சித்தார்த்தன் மாதிரியான மாறுபட்ட வேடம். பணக்கார இளைஞனாக வாழப்பிடிக்காமல் ரிக்ஷா ஓட்டுவார். அஞ்சலி கணேசனின் அத்தை மகள். நிஜமாகவே ஏழை. இருவருக்கும் இடையே வித்தியாசமாக சைக்கிள் ரிக்ஷா பேக் ரவுண்டில் ட்ரீம் சாங் இடம் பெறும்.

பி.பி. ஸ்ரீநிவாஸ்- பி. சுசிலா இரு குரல் இசையில் ஒலித்தது சூப்பர் ஹிட் பாடலான

'கண்டேனே உன்னைக் கண்ணாலே காதல் ஜோதியே! ’

பி.பி. ஸ்ரீநிவாஸ் சிவாஜிக்காகப் பாடிய ஒரே சிரஞ்சீவி கீதம்!

ஏறத்தாழ ஒரு மாமாங்கத்துக்குப் பிறகு 1971ல் முக்தா பிலிம்ஸ் 'அருணோதயம்’ படத்தில் சிவாஜியும் அஞ்சலியும் தாயும்- மகனுமாக நடித்தார்கள்.

சிவாஜிக்கு ஜோடியாகவும், அன்னையாகவும் உரு மாறிய நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர்.

நன்றி மறவாதவர் நடிகர் திலகம். அஞ்சலி மீது அபாரமான மதிப்பும் மரியாதையும் நிரம்பியவர். அவரைத் தன் வாழ் நாள் முழுவதும் 'முதலாளியம்மா’ என்கிற அர்த்தத்தில் 'பாஸ்’ என்றே அழைத்தார்.

பட்டிக்காடா பட்டணமா, வசந்தமாளிகை என்று 1972ல் இரு வெள்ளிவிழாப் படங்களை ஒரே ஆண்டில் தந்து சிவாஜி புதிய சாதனை படைத்திருந்த நேரம்.

சித்ராலயா ஸ்ரீதரின் ' ஹீரோ 72 ’படத்துக்கு கால்ஷீட் தர முடியாத நெருக்கடி. ஏராளமாகப் புது ஒப்பந்தங்கள் அணி வகுத்து நின்றன.

அத்தகைய கெடுபிடியான காலக் கட்டத்தில் அஞ்சலி தனது பக்த துகாராம் வண்ணத் தயாரிப்பில்,

நடிகர் திலகம், 'சத்ரபதி சிவாஜியாக’ சிறப்புத் தோற்றத்தில் நடித்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

'சிவாஜியும் நானும் அதிகப் படங்களில் இணைந்து நடிக்கவில்லை. உண்மையில் இருவரும் நிற்க நேரமில்லாமல் ஏராளமாக நடித்து முடிக்க வேண்டி இருந்தது.

ஆனாலும் பாருங்கள்... சிவாஜிக்கு எங்க கம்பெனின்னா ஒரு தனி மரியாதை.

'என் பாஸ் பண்ற படமாச்சே... அதில் நடிக்காமல் இருப்பேனா...! ’ என்று உற்சாகமாக ஒப்புக் கொண்டு, ஐதராபாத் வந்து அங்கேயே தங்கியிருந்து நடித்துக் கொடுத்தார். ’ அஞ்சலிதேவி.

மிகக் குறுகிய காலத்தில் தயாராகி, 1973 ஜூலை 5 ல் பக்த துகாராம் தமிழிலும் வெளியானது.

ஏ.நாகேஸ்வர ராவ் பக்த துகாராம். அவரது மனைவியாக அஞ்சலி நடித்திருந்தார்கள்.

பக்த துகாராமைத் தண்டிக்க வேண்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியாக ஏறக்குறைய படத்தின் அரை மணி நேர க்ளைமாக்ஸ் முழுவதும் சிவாஜி கணேசனின் சிம்மக் குரல் ஒலித்தது.

தனது முதலாளியம்மாவுக்காக கணேசனே டப்பிங் பேசியிருந்தார்.

மனப்பூர்வமான ஒத்துழைப்போடும் அருமையான ஆளுமை மிக்க நடிப்போடும் கணேசன் படத்தின் வெற்றிக்கும் மகத்தான வசூலுக்கும் அஸ்திவாரமாக நின்றார்.

சத்ரபதி சிவாஜியாக கணேசனை முழு நீள சினிமாவில் காண முடியாமல் போனது நமது துரதிர்ஷ்டம். அஞ்சலி மூலம் ரசிகர்களின் ஆசை பத்து விழுக்காடு நிறைவேறி இருக்கும்.

இதுவரையில் திரையில் சத்ரபதி சிவாஜியை கவனியாதவர்கள், அடிக்கடி சன் லைஃப் சேனலில் ஒளிபரப்பாகும் பக்த துகாராம் படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.

நடிகர்திலகத்தைக் கை தூக்கி விட்டவர்கள் எவரையும் மறக்காமல்,2002 முதல் ஆண்டு தோறும் கணேசனின் பிறந்த நாளான அக்டோபர் முதல் தேதி அன்று- 'சிவாஜி - பிரபு அறக்கட்டளை’ பாராட்டி ஐம்பதாயிரம் ரூபாய் பரிசளித்து நன்றி கூறுகிறது.

அந்த வரிசையில் 2003 அக்டோபர் 1ல் அஞ்சலிதேவிக்குச் சிறப்புச் செய்தார்கள் சிவாஜி குடும்பத்தினர். ஏ.நாகேஸ்வரராவ் - கமல்ஹாசன் இருவரும் விசேஷ விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com