லவகுசாவுக்குப் பின்னர் அஞ்சலியை நாயகியாகக் காண முடியாமல் போனது. எழுத்தாளர் மகரிஷியின் மறக்க முடியாத புதினம் ‘பனிமலை’. ‘என்னதான் முடிவு? ’ என்கிற டைட்டிலில் கே.எஸ். கோபாலகிருஷணனின் அற்புத படைப்பு. திரையில் ஓடாமல் போனது.
அதில் அஞ்சலி முக்கிய வேடம் ஒன்றில் நடித்தார்.
‘அஞ்சலிதேவி கடைசியாக வந்தாலும் கவனத்தைக் கவர்கிறார். முடிவாக இது ஒரு புது முயற்சி! ’ என்று ஆனந்த விகடன் ஆதரித்து எழுதியது.
ஏவி.எம். ராஜனுக்கு நாயகன் அந்தஸ்து நிலைக்கக் காரணமாக இருந்த படம் என்னதான் முடிவு? ஏனோ அதற்கு தேசிய விருது கிடைக்கவில்லை.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய சமூகச் சித்திரமாக கமல் போன்றவர்களால் என்றும் கொண்டாடப்படுகிறது என்னதான் முடிவு.
அஞ்சலியின் செகன்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாக ஆரம்பித்தது. குணச்சித்திர நடிப்பில் அடுத்து 1965 தீபாவளிக்குக் கலைஞரின் பூமாலை மணம் சேர்த்தது.
ஏவி.எம்.மின் ‘பக்தப்பிரகலாதா’ தெலுங்கு வண்ணச்சித்திரத்தில் அஞ்சலிக்கு இரண்ய கசிபுவின் மனைவி லீலாவதி வேடம்.
இரண்யனாக எஸ். வி.ரங்காராவ் - பிரகலாதனாக பேபி ரோஜாரமணி இருவருக்கும் இடையில் அஞ்சலியின் தாய்மை பொங்கும் நடிப்பு பக்தப் பிரகலாதாவைத் தமிழிலும் பேச வைத்தது.
தமிழ் சினிமாவின் மூவேந்தர்களுடன் பணியாற்றிய காலம் முடிந்து, இளைய தலைமுறைக் கலைஞர்கள் முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் படங்களில் ‘அம்மா’ வேடங்களில் அஞ்சலி நடித்து வந்தார்.
1974 தைத்திருநாள் கொண்டாட்டம் ஸ்ரீதர் -பொன்மனச் செம்மல் முதன் முதலாக இணைந்த உரிமைக்குரல் வெற்றிச்சித்திரம்!
ஏ.நாகேஸ்வரராவ் நடித்த தசராபுல்லடு தெலுங்கு ரீமேக். அதில் ஏ.என்.ஆரின் அண்ணியாக அஞ்சலி நடித்திருந்தார்.
‘அடுத்த வீட்டுப் பெண்’ சினிமாவில் ஏற்பட்டக் கசப்பை மறந்து ஸ்ரீதர், அஞ்சலியை அதே வேடத்தில் தமிழிலும் அழ வைத்தார். அதில் அஞ்சலியின் கணவராக எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தவர் எஸ். வி. சகஸ்ரநாமம்.
உரிமைக்குரல் பட்டி தொட்டிகளில் ஓடி அஞ்சலியை மீண்டும் மக்கள் மத்தியில் பேச வைத்தது. 1979 தீபாவளிக்கு தேவர் பிலிம்ஸின் தமிழ்- தெலுங்கு வெளியீடு அன்னை ஓர் ஆலயம்.
அதில் ரஜினியின் அம்மாவாக இரு மொழிகளிலும் அஞ்சலிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு அமைந்தது. பெற்ற பிள்ளையைக் காப்பதற்காக மதம் பிடித்த யானையிடம் மாட்டிக் கொண்டு உயிரை விடும் வேடம்.
அஞ்சலியின் மறைவைத் தாங்க இயலாமல் டி.எம். எஸ்ஸின் கம்பீரக்குரலில் ரஜினி பாடுவதாக வரும்
‘அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை’ கல்யாண சத்திரங்களிலும் ஒலித்தது.
அஞ்சலி நிறைவாக ஓரிரு சினிமாக்களில் பங்கேற்றார்.
1982ல் கங்கை அமரன் இயக்கத்தில் பொழுது விடிஞ்சாச்சு படத்தில் பிரபுவின் பாட்டியாகவும், 1987 பொங்கல் ரிலிசான சத்யா மூவிஸ் காதல் பரிசு படத்தில் கமல்ஹாசனுடனும் அஞ்சலியைக் காண முடிந்தது.
அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் கலை உலகில் வெற்றி பவனி வந்தவர் அஞ்சலி. தமிழை விடத் தெலுங்கில் வசூல் சாதனை புரிந்து பிரமாதமாக ஓடிய அத்தனைப் படங்களிலும் அஞ்சலியே ஹீரோயின்.
அஞ்சலி- ஏ. நாகேஸ்வரராவ் இணைந்து நடித்த ஏராளமான வெற்றிச் சித்திரங்கள் ஆந்திர சகோதரர்கள் அனைவருக்கும் திகட்டாத திரை விருந்தாக இன்னமும் நினைவில் நிற்கும்.
தமிழில் 50, தெலுங்கில் 64, இந்தியில் 10 ஆக 1967 மார்ச் வரையில் அஞ்சலி 124 படங்களில் நடித்துள்ளதாக பொம்மை மாத இதழ் ஒரு குறிப்பை வழங்கியுள்ளது.
தமிழில் அஞ்சலியோடு அதிகப்படங்களில் ஜோடி சேர்ந்த கதாநாயகன் ஜெமினி. காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி மாதம்- 2006ல் ஜெமினி கணேசன் பற்றிய நேர்காணலுக்காக அஞ்சலிதேவியைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் கூறியவை:
‘சினிமால 2006 போகி அன்னிக்கு எனக்கு அறுபதாவது வருஷம் ஆரம்பமாச்சு. கணவனே கண் கண்ட தெய்வம் கதையை கேட்கறப்பவே நான் அழுதேன்.
‘முதல்ல எனக்கு டயலாக் சொல்லிக் கொடுத்துடுங்க. அஞ்சலி டேக்ல அசத்திடுவாங்க. ’ என்று ரிகர்சலில் முந்திக் கொள்வார் ஜெமினி. பேசி வெச்சிக்கிட்டு இருவரும் ஆக்ஷனுக்கு ரீ ஆக்ஷன் செய்வோம்.
கணவனே கண் கண்ட தெய்வம் ஓஹோன்னு ஓடுச்சு. அதன் இந்தி ரீமேக் ‘தேவதா’லயும் நானும் ஜெமினியும் தான் ஜோடி.
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு சினிமாவுக்குள்ளே வந்தேன். அப்ப எனக்குத் தெரியாது- ஜெமினி ‘காதல் மன்னன்’னு.
கணவனே கண் கண்ட தெய்வம் ஷூட்டிங் சமயத்துலதான் சாவித்ரியோட அவருக்கு லவ் அஃபேர் ஏற்பட்டுச்சு. சாவித்ரி அடிக்கடி வாஹினி செட்டுக்கு வரும்.
‘அக்கா நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். இவரைத்தான்...’
‘அப்படியாம்மா ரொம்ப சந்தோஷம்! ஆனா நீ ஜாக்கிரதையா இருக்கணும். நாம தெலுங்கு. அவரு தமிழ். ’
நானும் சாவித்ரியும் சிஸ்டர்ஸ் மாதிரிதான். அப்புறமா அஞ்சலி அம்மான்னு ரொம்ப மரியாதை என் மேலே. பெரிய ஸ்டார் ஆகியும் அஞ்சலியம்மா படங்கள் பார்த்துத்தான் நடிக்க வந்தேன்னு’ சாவித்ரி ஓபனா சொல்லும்.
ஒரு நாள் ஜெமினி கிட்டே நேரடியாவே கேட்டுட்டேன்.
‘என்ன சமாச்சாரம்... கல்யாணம்னு சொல்லுதே அந்தப் பொண்ணு.’
‘ஆமாம்மா’
‘உங்கள நம்பி வருது ஜாக்ரதையா பார்த்துக்குங்க’
அப்புறம் தான் தெரிஞ்சது. அவரு ஏற்கனவே கல்யாணம் ஆனவர்னு. பர்ஸ்ட் வைஃப் ஒத்துக்கிட்டார். ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தாங்க.
ஜெமினி கணேஷ் ரொம்ப நல்லவர். எந்த ப்ரொடியூசரும் அவரால சஃபர் ஆனதா சொல்ல முடியாது. சாவித்ரியைக் கல்யாணம் பண்ணிண்டப்பறம் தெலுங்கு நல்லா பேசுவார். எங்க வீட்டுக்காரர்னா அவருக்கு ரொம்ப உசுரு. மியூசிக்லயும் கணேஷூக்கு இன்ட்ரஸ்ட் உண்டு.
நளாயினி படத்துல எனக்கு காந்தாராவ் ஜோடி. சிவனாக ஜெமினி -பார்வதியா சாவித்ரி, பிரம்மாவாக ஜக்கையா - சரஸ்வதியா ஜமுனா கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தாங்க.
ஜெமினியோட டாட்டர் ரேகாவுக்கு அப்ப பத்து வயசு இருக்கும். எங்கூட ‘ரங்குல ராட்டினம்’ படத்துல நடிச்சது. பெரிய பெண்ணாகி ‘அம்ம கோசம்’ படத்துல கிருஷ்ணம் ராஜூ-ரேகா இளஞ்ஜோடி, அவங்களோட நானும் கும்மிடி வெங்கடேஸ்வராவும் சேர்ந்து நடிச்சோம்.
பொதுவா நான் யாரு ஹீரோன்னு கேட்டதே கிடையாது. அவங்க யாரா இருந்தா என்ன...? எனக்கான கேரக்டர் என்ன, கதை என்னன்னு தான் பார்ப்பேன்.
அப்படியும் ஜெமினி மட்டுமில்லாம அவர் வாரிசோடயும், சிவாஜி - பிரபு ரெண்டு பேர் கூடவும் நடிக்க சந்தர்ப்பம் கிடைச்சது! ’
-----------------------
எந்தத் தென்னக நட்சத்திரத்துக்கும் இன்று வரை அமைந்திராத மிக அரிய அரியணை வாய்ப்பு 1959ல் அஞ்சலிக்குக் கிடைத்தது.
‘தென் இந்திய நடிகர் சங்கத்தின் சிம்மாசனத்தைக் கைப்பற்றிய ஒரே ஒப்பற்றத் தலைவி அஞ்சலி! ’
அஞ்சலி பங்கேற்ற அத்தனைத் துறைகளிலும் முத்திரை பதித்தது போல் நடிகர் சங்கத்திலும் மிகக் குறுகிய காலத்தில் அதிரடி முடிவுகளை எடுத்தார்.
கலையுலகில் திருவாங்கூர் சகோதரிகளுடன் உல்லாச ஊர்வலம் வந்தனர் சாவித்ரி- எம். என். ராஜம்- ராஜ சுலோசனா மூவரும். அவர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து,
‘இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை - சங்கக் கலைஞர்களின் விடுமுறை தினம்’ என்று உத்தரவு போட்டார் அஞ்சலி!
ஓய்வு ஒழிச்சலின்றி ஒப்பனையோடு அவதிப்பட்ட நடிகைகள், அஞ்சலியால் அப்பாடா...! என்று ஓய்யாரப் பெருமூச்சு விட்டனர்.
கடவுள்களுக்கும் கலைஞர்களுக்கும் கணிசமான தொடர்பு எப்போதும் உண்டு. தமிழ் சினிமா சரித்திரப் பாடத்தில் ‘பொருத்துக’ என்கிறத் தலைப்பில்,
நடிகர் நடிகைகளையும், தெய்வங்களையும் மாற்றி மாற்றிக் கொடுத்தாலும், கண்ணை மூடிக் கொண்டு
1.எம். என். நம்பியார் - அய்யப்பஸ்வாமி 2. சாண்டோ சின்னப்பா தேவர் - முருகன் 3. என்.டி.ராமாராவ் -கிருஷ்ணன் 4. ரஜினிகாந்த்-ஸ்ரீராகவேந்திரர் 5. அம்மன் - கே.ஆர்.விஜயா 6. சாய்பாபா - அஞ்சலிதேவி என்று மிகச் சரியான விடையை எழுதி முழு மதிப்பெண் பெறுவான் கடைசிக் குடிமகனும்!
அன்றாடம் அரிதாரம் பூசி வெள்ளித் திரையில் ஆடிப்பாடிக் கொண்டிருந்த அஞ்சலியை சாயிபாபா எப்படி ஆட் கொண்டார்...!
தமிழகத்தில் கோடானு கோடி ஆன்மிக அடியார்களின் ‘சாயி பக்த சமாஜத்தில்’ அஞ்சலியை சங்கமிக்கச் செய்து அவரையும் சாயிக்குத் தொண்டாற்ற ஓர் உந்து சக்தியாக்கினார்...?
இந்தி கணவனே கண் கண்ட தெய்வம் (தேவதா) வடக்கில் மேலும் அஞ்சலியைப் பிரபலப்படுத்தி வசூலில் வாகை சூடியது.
அதன் வெற்றி தந்தத் துணிச்சல் அஞ்சலி பிக்சர்ஸ் இந்திப்படத் தயாரிப்பில் ஈடுபட்டது.
தமிழிலும் தெலுங்கிலும் வெற்றி முரசு கொட்டிய மணாளனே மங்கையின் பாக்கியம் சினிமாவை இந்தியிலும் வெளியிட்டனர். நன்றாகவே ஓடி பொருளீட்டித் தந்தது.
அதற்குப் பின் நடந்தவை அஞ்சலியின் மனப்பத்தாயத்திலிருந்து-
‘இந்தி சூப்பர் ஸ்டார்கள் அசோக் குமார், மனோஜ் குமார், வைஜெயந்திமாலா நடிக்க‘பூலோகி சேஜ்’ங்கிற பெயர்ல பிரம்மாண்டமா சினிமா எடுத்தோம்.
மிகப் பெரிய நடிகர்கள், பிரம்மாண்டமானத் தயாரிப்புன்னு ஏராளமா செலவு பண்ணியும் டிஸ்டிரிபியூட்டர்களிடம் மோசம் போயிட்டோம்.
விநியோகஸ்தர்களின் நம்பிக்கைத் துரோகம் திடீரென எங்களைக் கழுத்தளவு கடல் தண்ணீரில் கொண்டு விட்ட மாதிரியானது.
ஏகப்பட்ட கடன் சுமையால் தொடர்ந்து அதிர்ச்சி. தொட்டதெல்லாம் பொன்னாகியத் தருணங்கள் எங்கள் வாழ்வில் விடை பெற்றுப் போனதாக நிலை குலைந்தோம்.
அந்த நேரத்தில் எங்கள் குடும்ப நண்பரும் மிகச் சிறந்த நடிகரும்- இசைச் சித்தருமான சித்தூர் வி. நாகையா அண்ணன் மூலம் ‘பாபாவின்’ கருணை கிட்டிற்று.
நாகையா அவர்களின் ‘சஷ்டியப்த பூர்த்தி விழா’ பாபா அருளினால் நடந்தது.
அது முடிந்த ஐந்தாவது நாள் பாபா சென்னைக்கு வந்தார். பாபாவை அருகாமையில் பார்த்ததும் எனக்குப் பேச்சே வரவில்லை. என் இருதயத்தில் அதுவரை இருந்து கொண்டிருந்த பாரம் எங்கே போனதென்றே தெரியவில்லை.
கருணையோடு எங்களைப் பார்த்தார் பாபா. கவலைப்படாதீங்க. மறுபடியும் நல்லா வருவீங்க’ என்று இவ்வளவுதான் சொன்னார். அது நடந்தது 1963 டிசம்பர் மாதம்.
அதன் பிறகு இழந்து போனதாக நாங்கள் உணர்ந்த அத்தனையும் கூடுதலாகவே எங்களுக்குத் திரும்பக் கிடைத்தது. தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டோம்.
இரண்டாவது இன்னிங்ஸில் முதலாவதாக ‘சக்குபாய்’ பக்திச்சித்திரம் வந்தது. நன்றாக ஓடியது. அடுத்து எடுத்த எல்லா சினிமாக்களுமே லாபம் தந்தன.
பாபா அனுமதியுடன் ‘சாயி கதை’ பற்றிய பாட்டு எழுதிக் கொடுத்தேன். சின்னத் திரைக்காக நான் தயாரித்த ‘சாயி’ வரலாற்றுத் தொடரில் பாபாவின் அன்னை ‘ஈஸ்வரம்மாவாக’ நடித்தேன். அது பெரும் பாக்கியம்!
பாபாவின் தரிசனம் கிடைத்த மாத்திரத்தில் என் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.
அதுவரையில் சம்பாதித்த அனைத்தையும் இழந்து அவதிப்பட்ட சூழலில், காந்தியவாதியும், மிகச் சிறந்த குணச்சித்திரக் கலைஞருமான கே. சாரங்கபாணி அண்ணன் இல்லம் தேடி வந்தார்.
‘உன் பெரிய பையனுக்கு என் பெண்ணைத் தர விரும்பறேம்மா’ என்ற சர்க்கரைச் செய்தியை இனிப்பாகத் தெரிவித்தார்.
எந்தச் சமயத்தில் சாரங்கபாணி அண்ணன் சம்பந்தம் பேசினார் என்பதைச் சற்றே சிந்திக்க வேண்டும். நாங்கள் நிராதரவான நிலையில் நாளைய பொழுது எப்படி விடியுமோ... என்று நிம்மதி இழந்து நின்ற நேரத்தில், எங்களைத் தேடி வந்து சுப காரியம் பேசினார்.
‘இனி எல்லாம் பாபா’தான் என்றாகிப் போனதால், பாபாவை தரிசித்து இந்த மங்கலச் சேதியை அவர் காதுகளுக்கும் கொண்டு சேர்க்கலாமே என புட்டபர்த்திக்குப் புறப்பட்டோம்.
அவரது திருவடிகளைத் தொழுது நின்றதும் சிரித்துக் கொண்டே,
‘என்ன... சாரங்கபாணி பொண்ணு தரேங்கிறாரா... ’ என்றார்.
தெய்வீகப் புன்னகை திவ்ய முகத்தில் அருட் புனலாக ஓட, மெல்ல பாபாவின் ஞானக் குரல் கருணையோடு ஒலித்தது.
எங்களுக்கு மெய் சிலிர்த்தது. அந்த ஆச்சரியத்தை ரசித்தவர் போல்,
‘தாராளமாகக் கல்யாணம் செஞ்சு வையுங்க. மன தைரியத்தோட மங்கல காரியத்தை நடத்துங்க. அவங்க நல்லா இருப்பாங்க... ’
என்று ஆசி கூறினார். பகவானின் வாழ்த்து பலித்தது!
ட்வன்டிபர்ஸ்ட் செஞ்சுரியிலும் என் சுறுசுறுப்புக்கு சாயிபாபாவின் அளவற்ற அருளே காரணம் என உளமாற உணர்கிறேன். ’ - அஞ்சலிதேவி.
அஞ்சலி- ஆதி நாராயணராவ் தம்பதியருக்கு அளவான மகிழ்ச்சியான குடும்பம். இரு மகன்கள். முதலாமவர் - இன்ஜினியர் சின்னாரி ராவ். அவரது மனைவி விஜயலட்சுமி- நடிகர் கே. சாரங்கபாணியின் மகள்.
இளைய தம்பதிகள் நிரஞ்சன் குமார்-பாரதி. இருவருமே டாக்டர்கள்.
மிக நீண்ட காலம் அழகோடும் ஆரோக்கியத்தோடும் ஆனந்தத்தோடும் தென்னகத் திரைவானில் நட்சத்திரமாக கம்பீர ஒளி வீசியவர் அஞ்சலி. 2006ல் அவரை முதலும் கடைசியுமாக நான் சந்தித்த போது அதை உணர்ந்தேன்.
அஞ்சலி நடித்த தெலுங்கு படங்களான அனார்கலி, ஸ்வர்ன சுந்தரி, செஞ்சு லட்சுமி, ஜெயபேரி போன்றவை பிலிம் ஃபேர் அவார்டு வாங்கியவை.
குண்டூர் நாகார்ஜூனா பல்கலைக்கழகம் அஞ்சலிக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
பத்மினி, சாவித்ரி, வரிசையில் அஞ்சலிக்கும் உரிய பரிசை ஏனோ மத்திய அரசு வழங்காமல் போனது.
‘பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் என்பது போன்ற அரசு விருதுகள் எதுவும் என்னைத் தேடி வரவில்லை. ஆனால் இப்போதும் என்னைப் பார்க்கிற ரசிகர்கள் ‘அம்மா... கணவனே கண் கண்ட தெய்வம் பார்த்தேன்... மணாளனே மங்கையின் பாக்கியம் பார்த்தேன் என்று சொல்லி, என் நடிப்பைப் பாராட்டும் போது கிடைக்கிற சந்தோஷத்தை விட ‘விருது’ பெரிய உற்சாகத்தைத் தர முடியாது. ’- 1999ல் அஞ்சலிதேவி.
2014 ஜனவரி 13 மதியம். அஞ்சலி கலையுலகில் காலடி எடுத்து வைத்த போகித் திருநாள்!
ரசிகர்களை மகிழ்விக்க ஆடிப்பாடிய அதே வாஹினி வளாகம்- விஜயா மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.
சாயிபாபா காட்டிய ஆன்மிக வழியில் அமைதியாக அஞ்சலியின் வாழ்க்கை நிறைவு பெற்றது.