ஆசனம் 51. சந்திர நமஸ்காரம்

காலையில் சூரிய நமஸ்காரம் செய்கிறோம். அதுபோல மாலைப்பொழுதில் செய்யும் ஆசனம் சந்திர நமஸ்காரம்.

அஷ்டாங்கயோகம் - பிரத்யாகாரம்

யோக நீதிக் கதைகள்

வாழ்க்கை

அஞ்சலியின் கணவன் அஜய் ஒரு வழிஞ்சான். ஒரு பெண்ணையும் சும்மா விடமாட்டான். பார்வையாலேயே மேய்ந்து அசைபோட்டுவிடுவான்.

அஞ்சலியே தனது தோழி சுப்ரஜாவிடம் இது பற்றி நிறைய தடவை பேசியிருக்கிறாள். ரோட்டுல ஒரு பொண்ணு கிளாமரா போகக்கூடாது. நான் பக்கத்துல இருந்தாகூட அவர் கண்ணு மேயும்பாரு. யப்பா… இந்த நெலமையில, ஐடி கம்பெனியில டீம் லீடரா பெரிய பொறுப்புல வேற இருக்காரு. அவர்கூட வேலை பாக்கற பொண்ணுங்க அவர்கிட்ட எப்படி நடந்துப்பாங்களோ, ரொம்ப பயமா இருக்குடி என்று அடிக்கடி புலம்புவாள்.

அஞ்சலி இருப்பது அயனாவரம். சுப்ரஜா இருப்பது கோடம்பாக்கம். இருவரும் பத்து தினங்களுக்கு ஒரு தடவை எங்காவது கோயில், பார்க், ஹோட்டல்களில் சந்தித்து குடும்ப நிலவரங்களைப் பற்றிப் பேசுவது வழக்கம்.

அடுத்த ஒரு வாரத்துக்குள்ளேயே சுப்ரஜா அப்படி ஒரு அதிர்ச்சிகரமான காட்சியைப் பார்ப்பாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை!

கணவன் திவாகருடன் பைக்கில் மூர் மார்க்கெட்டுக்கு போய்க்கொண்டிருந்த சுப்ரஜா, வேகமாக முந்திச் சென்ற புல்லட்டை உற்றுப் பார்த்தாள். அதில், அஞ்சலியின் கணவன் அஜய். பின் இருக்கையில் ஆபாசமாக உடையணிந்த பெண்.

இக் காட்சியைப் பார்த்ததும் அவள் கை பரபரத்தது. உடனே தன் செல்லை எடுத்து அஞ்சலியைத் தொடர்புகொண்டு, சற்று முன் தன் கண்ணால் பார்த்த காட்சியை அப்படியே போனில் விவரித்தாள்.

சுப்ரஜா சொன்னதைக் கேட்டு அஞ்சலி அதிர்ச்சியில் உறைந்துபோனாள்.

நல்லா பார்த்தியா, அவர்தானா…

என் ரெண்டு கண்ணாலயும் நல்லா பார்த்தேன்டி. அந்தக் கண்றாவிய என் மொபைல்ல படம் பிடிச்சிருப்பேன். ஆனா என் ஹஸ்பண்டுதான் வேணான்னு சொல்லிட்டாரு.

சரிடி. ரொம்ப தேங்க்ஸ். நான் பாத்துக்கறேன் என்று சொல்லி அஞ்சலி கட் பண்ண, அவள் குடும்பத்துக்குள் குண்டு வைத்துவிட்டோமோ என்று பயந்தாள் சுப்ரஜா.

மறுநாள் அஞ்சலிக்கு போன் செய்தாள்.

இருக்காதுடி. நீ பார்த்தது அவரா இருக்காது. அவர் ஜொள்ளு பார்ட்டிதான். ஆனாலும்… என்று அவள் இழுக்க,

அப்பன்னா, நான் என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தது பொய்யா?

இருக்கலாமே. ஏன்னா, நான் என் ஹஸ்பண்ட்கிட்ட நேத்து நைட்டு நல்லா விசாரிச்சிட்டேன். தன்னோட சபலத்தை ஒத்துக்கிட்ட அவர், ஒரு பொண்ண பைக்குல உக்கார வெச்சி ஊர் சுத்தற அளவுக்கு மோசமானவன் இல்லடின்னு சொல்லிட்டார். எனக்கும் அவர பத்தி நல்லா தெரியும். நம்பிக்கைதானடி வாழ்க்கை…

சரிடி, நான் பார்த்தது வேற ஒருத்தராகூட இருந்துட்டு போகட்டும். இன்னொரு தடவை உன் புருஷன இந்த மாதிரி கையும் களவுமா பிடிச்சிக் குடுத்தாதான் நீ நம்புவே. சாட்சியா போட்டோவும் எடுத்துக் காட்டறேன் என்று கட் செய்தாள் சுப்ரஜா.

*

சனிக்கிழமை மாலை. கணவன் திவாகருடன் பைக்கில் உட்கார்ந்து பீச்சுக்கு சென்றுகொண்டிருந்தாள் சுப்ரஜா.

இதோ, அவர்களை ஓவர் டேக் செய்த புல்லட்டில் அதே பழைய காட்சி. அஞ்சலியின் கணவனும், அதே கவர்ச்சிக்கன்னியும்.

ஏங்க சீக்கிரம், அந்த புல்லட்டை ஃபாலோ பண்ணுங்க என்று அவசரப்படுத்தினாள்.

அஞ்சலிக்கு அவ புருஷன் அஜய் பண்ற துரோகத்த ஆதாரபூர்வமாக அவகிட்ட நிரூபிக்கணும். சீக்கிரம் போங்க…

திவாகர் ஆக்ஸிலேட்டரை முடுக்கி பைக்கை வேகப்படுத்தினான்.

சுப்ரஜா அந்த புல்லட்டையே எட்டிப் பார்த்துக்கொண்டே வந்தாள். நல்லவேள, அதோ சிக்னல் போடப்போறாங்க. இனி என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. சீக்கிரம் போங்க…

சிக்னலில் அஜய் புல்லட் நின்றது. பின்னால் உட்கார்ந்திருந்த ‘கன்னி’ அஜய்யின் முதுகோடு ஒட்டி உரசிக்கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்து சுப்ரஜாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது. என் தோழிக்கா துரோகம் செய்கிறாய் துரோகி.

திவாகர் கொஞ்சம் முன்னால போங்க. அஜய்யோட முகம் சரியா தெரியல.

திவாகர் கொஞ்சம் முன்னால் போக, யாரோ திட்டமிட்டு தன் அருகில் வருவதை புரிந்துகொண்ட அஜய், பக்கத்தில் வந்த பைக்கை நோட்டம் விட்ட அடுத்த நொடி திடுக்கிட்டான். பச்சை சிக்னல் விழுவதற்கு முன்னதாகவே புல்லட்டை வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டான்.

ஆனால் சுப்ரஜா கில்லாடியாச்சே. அஜய் போவதற்குள் அந்தக் ‘கன்னி’யுடன் அவனை சேர்த்துவைத்து படம் பிடித்துவிட்டாளே.

ஃபன்டாஸ்டிக். போட்டோ நல்லா வந்திருக்கு. இதோ இப்பவே அஞ்சலிக்கு வாட்ஸ் அப்புல அனுப்பி வெக்கிறேன் என்றாள்.

நல்லா யோசிச்சிக்கோ சுப்ரஜா. ஏன்னா இது இன்னொருத்தரோட வாழ்க்கை.  நாம பார்த்தது அஜய்தான். சந்தேகமே இல்ல. பொண்டாட்டிக்கு பச்சைத் துரோகம் பண்றான்.  ஆனா அஞ்சலி பாவம். பக்குவம் இல்லாத பொண்ணு.  அதுக்கு நாம என்ன பண்ண முடியும் சொல்லு.  இருந்தாலும், நாம கண்ணால பார்த்தத மறைக்கக்கூடாது. நீ எடுத்த போட்டோவ அஞ்சலிக்கு அனுப்பி வை. என்ன ஆகுதுன்னு பார்ப்போம். பட் கேர்ஃபுல் என்று எச்சரித்தான் திவாகர்.

இனி எங்கே பீச்சுக்குப் போவது என்று நினைத்து, மீண்டும் வீட்டுக்குத் திரும்பிய சிறிது நேரத்தில் அஞ்சலியிடம் இருந்து சுப்ரஜாவுக்கு போன்.

சுப்ரஜா நீ அனுப்பின போட்டோவ பார்த்தேன்டி. அது அவர் இல்லடி. அந்த அளவுக்கு என் புருஷனுக்கு தைரியம் வராதுடி. பார்ப்பாரு, ஆசைப்படுவாரே தவிர, இந்த மாதிரி தப்பெல்லாம் அவர் பண்ண மாட்டாருடி. அந்த விஷயத்துல அவர் ரொம்பக் கோழை.

அஞ்சலி சொன்னா தப்பா நெனச்சிக்காத. நீ பைத்தியமேதான். நானும் என் புருஷனும் கண்ணால பார்த்தோம். போட்டோ வேற எடுத்து அனுப்பியிருக்கேன். இதையே நீ நம்பலன்னா… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலடி.

சாரி சுப்ரஜா. ஒருவேள, நீங்க பார்த்தது அவராகூட இருக்கலாம். இருந்தாலும், நான் என்ன பண்ண முடியும் சொல்லு. பெரிய ஐடி கம்பெனியில பெரிய பொறுப்புல இருக்கார். ஹைசொசைட்டி பீப்பிளோட மூவ் பண்றவரு. நான் இத கேக்கப்போய், அவர் என்னை டைவர்ஸ் பண்ணிட்டா என்ன ஆகறது. பிள்ளைகளோட எதிர்காலத்துக்காக பார்க்கவேண்டி இருக்கு. போகட்டும் விடுடி. ஊர்ல எல்லா ஆம்பளையும் அப்படித்தான்.

நிறுத்துடி. என் புருஷன் அப்படி கெடையாது.

அப்படி சொல்ல முடியாது சுப்ரஜா. பொண்டாட்டி முன்னால ராமன் மாதிரி நடந்துக்கறவங்கதான் ஜாஸ்தி. ஆம்பளைங்கள திருத்தவே முடியாது.

அடச்சீ என்று கோவத்தில் போனை கட் செய்தாள் சுப்ரஜா. அவ புருஷன் கெட்டவனா இருக்கான். ஆனா அதை ஏத்துக்காம, எல்லா ஆம்பளைங்களும் அப்படித்தான்னு பழி சொல்றா என்று கோவத்தில் பெருமூச்சு விட்டாள்.

*

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.

சுப்ரஜாவும் திவாகரும் ஹோட்டலில் பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தனர்.

அப்போது, அஞ்சலியின் கணவன் அஜய், அதே கவர்ச்சிக்கன்னியுடன் ஃபேமிலி கேபினுக்குள் நுழைவதைப் பார்த்து சுப்ரஜா கொதித்துப் போனாள்.

திவாகர் தடுத்தும், நீங்க பேசாம இருங்க என்று உள்ளே போக முயன்றாள்.

இதைப் பத்தி அஞ்சலியே கவலைப்படல நீ ஏன் அலட்டிக்கிறே?

அஞ்சலி வாயில்லா பூச்சிங்க. அவ புருஷன் அவளுக்கு பச்சைத்துரோகம் பண்றான். பாத்துக்கிட்டு சும்மா இருக்கச் சொல்றீங்களா. விடமாட்டேன். இன்னிக்கி அஜய்ய கையும் களவுமா பிடிச்சி, நேருக்கு நேரா நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேக்கத்தான் போறேன் என்று உள்ளே ஓடினாள்.

ஸ்பிரிங் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த சுப்ரஜா, அப்படியே வாயடைத்து நின்றுபோனாள்.

ஏய் அஞ்சலி… நீ எப்படி இங்க…

அஞ்சலியும் அஜய்யும் வெட்கத்தில் தலைகுனிந்தனர்.

நீ அடிக்கடி பைக்குல அஜய்யோட ஒரு பொண்ணை அரைகுறை டிரெஸ்ஸோட பார்த்தேன்னு சொல்லுவியே. அது வேற யாரும் இல்ல, நான்தான்டி.
சுப்ரஜா மேலும் திடுக்கிட்டு குழம்பினாள்.

நீ என்னடி சொல்ற…

ஆமான்டி. என் புருஷன் அஜய் பத்திதான் உனக்குத் தெரியுமே. பொண்ணுங்கள ஏன் அப்படி வெறிச்சிப் பாக்கறீங்கன்னு கேட்டா, அவங்க ஏன் அப்படி டிரஸ் பண்ணிட்டுப் வர்றாங்கன்னு திருப்பிக் கேப்பாரு. என் புருஷனுக்கு பெண்களை அந்த மாதிரி டிரஸ்ல பாக்கறது பிடிக்கும் தெரிஞ்சுது. நான் எப்படி இருக்கேன்னு பார்த்தேன். அப்பதான் யோசிச்சி, புருஷனுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிக்க நெனச்சேன்.  னே கடைக்குப் போய், கவர்ச்சியா இருக்கற மாதிரி டிரஸ் வாங்கிட்டு வந்து போட்டுக்கிட்டேன். அந்த டிரஸ்ல என்னை பார்த்து அவருக்கும் பிடிச்சிப் போச்சி. அதான், அவர் ஆபீஸ்ல இருந்து வரும்போது நான் இந்த மாதிரி டிரஸ் போட்டுக்குவேன். அப்படியே ரெண்டு பேரும் ஜாலியா வெளிய சுத்திட்டு வருவோம் என்றாள்.

பத்தாம்பசலி, வாயில்லாப் பூச்சி என்று நினைத்த அஞ்சலியா இப்படி என்று நினைத்து, சுப்ரஜா தன்னை முந்தானையால் இழுத்து மூடிக்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து அதிர்ச்சியுடன் கிளம்பினாள்.

***

ஆசனம்

சந்திர நமஸ்காரம்

காலையில் சூரிய நமஸ்காரம் செய்கிறோம். அதுபோல மாலைப்பொழுதில் செய்யும் ஆசனம் சந்திர நமஸ்காரம்.

மனதுக்கும் நிலவுக்கும் தொடர்பு உள்ளது. முழுநிலவு நாளன்று கடற்கரையில் அலைகள் மிக உயரமாக எழுவது கண்கூடு. நிலவின் ஈர்ப்பு விசை காரணமாக அப்படி அலைகள் உயர எழுகின்றன.

அந்த ஈர்ப்பு விசைதான் மூளையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல, நிலவு இல்லாத அமாவாசை நாளன்றும் அப்படி ஒரு மன மாறுதல் ஏற்படுவது இயல்பு. இந்த மாற்றங்கள் நம் மனதைப் பாதிக்காத வகையில் மனநிலையை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு சந்திர நமஸ்காரம் தேவைப்படுகிறது.

சந்திர நமஸ்காரம் (முதல் சுற்று)
 

முழங்கால்களால் மண்டியிட்டு நிற்கவும்.

வலது காலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு முன்னால் தள்ளி வைக்கவும்.

இடுப்பை முடிந்த அளவுக்கு முன்பக்கமாகத் தள்ளி வைக்கவும்.

கைகள் இரண்டையும் நெஞ்சுக்கு நேராகக் கூப்பி வைத்துக்கொள்ளவும்.

சுவாசத்தை உள்ளிழுத்தபடி, இரண்டு கைகளையும் மேலே தூக்கியவாறு தலைக்குப் பின்னால் கொண்டுசென்று ஆகாயத்தைப் பார்த்துக் கும்பிடவும்.

இதே நிலையில் ஆறு சுவாசங்கள் எடுக்கவும்.

பிறகு சுவாசத்தை வெளியிட்டவாறு, மீண்டும் கைகளை நெஞ்சுக்கு நேராக கும்பிட்டவாறு வைக்கவும்.

பின்னர், முன்வைத்த காலைப் பின்பக்கமாக எடுத்து, ஆரம்ப நிலைக்கு வரவும்.

சந்திர நமஸ்காரம் (இரண்டாம் சுற்று)

முதலில் வலது காலை எடுத்து முன் பக்கமாக வைத்து ஆசனம்  செய்தோம். இந்த முறை, இடது காலை எடுத்து முன்பக்கமாக மாற்றி வைத்துச் செய்யவும்.
பலன்கள்

மார்பும் முகமும் ஆகாயத்தை நோக்கி இருப்பதால், அதிகமான பிராண வாயுவை உள்ளிழுக்க முடிகிறது.

இடுப்பு முன்பக்கமாகத் தள்ளப்படுவதால், வயிறு மற்றும் இடுப்பப் பகுதியில் உள்ள உறுப்புகளுக்கு தாராளமான ரத்த ஓட்டம் கிடைக்கிறது.

முதுகுத் தண்டுவடம் வளைக்கப்படுவதால், முதுகு வலிகள் வராது.

மனநோய்கள் குணமாகும்.
 

காணொளி: கே.எஸ். இளம்மதி
படம்: ஐ. பாலாஜி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com